என் மலர்
செய்திகள்

காஞ்சிபுரத்தில் பலத்த மழை
காஞ்சிபுரம்:
கடந்த சில வாரங்களாக கடும் வெயிலின் தாக்கத்தால் காஞ்சிபுரம் மக்கள் தவித்து வந்து நிலையில் கடந்த இரு நாட்களாக வெய்யிலின் தாக்கம் மிகவும் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் 5 மணிக்கு ஆரம்பித்த மழை ஏறத்தாழ 7 மணிவரை இரண்டு மணி நேரம் கொட்டி தீர்த்தது. நகரின் முக்கிய சாலையான காந்திரோடு, காமராஜர் வீதி, மூங்கில் மண்டபம், பஸ்நிலையம், சங்கரமடம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான சாலைபகுதிகளாக மேட்டுத்தெரு, ஓரிக்கை ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இடி, மின்னல் மற்றும் சூறைகாற்றுடன் மழை பெய்ததால் நகரின் சில பகுதிகளில் சாலைகளில் மரங்கள் ஒடிந்து விழுந்தன. தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் துரிதமாக செயல்பட்டு இடர்பாடுகளை அகற்றி போக்குவரத்தினை சீர் செய்தனர்.
மழை காரணமாக இரவு ஏறத்தாழ மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நகரின் முக்கிய பகுதிகள் இருளில் மூழ்கின. கடும் வெய்யிலில் அவதிப்பட்ட காஞ்சிபுரம் மக்களுக்கு நேற்று பெய்த மழை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






