என் மலர்
செய்திகள்

நாகை மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகம் வழங்கும் நிகழ்ச்சி
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, நாகப்பட்டினம் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை கலெக்டர் பழனிசாமி வழங்கி துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:–
நடப்பு கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் இந்த பாடப்புத்தகங்களை படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு நல்ல முறையில் கல்வி கற்பித்து அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் எந்தெந்த பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்பதை கண்டறிந்து, அந்த பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளையும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதம் மற்றும் சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளையும் பாராட்டி கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் கஸ்தூரிபாய், மாவட்டக் கல்வி அலுவலர் அன்பழகி, மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.






