என் மலர்
செய்திகள்

நாகையில் அதிக அளவு சிக்கிய மீன்கள்: மீனவர்கள் மகிழ்ச்சி
நாகப்பட்டினம்:
கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 29-ந் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி வரை 45 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
ஆனால் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்த மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்ப்பது, வர்ணம் பூசுவது, வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து 45 நாட்கள் முடிவடைந்த நிலையில் கடந்த 29-ந்தேதி நள்ளிரவு முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்கள் ஒரு வார காலம் நடுக்கடலில் படகிலேயே தங்கி மீன் பிடித்து கொண்டு கரைக்கு திரும்பி வருவார்கள்.
அவ்வாறு செல்லும் மீனவர்கள் ஒரு வார காலத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள், ஐஸ் கட்டிகள், டீசல் உள்ளிட்டவைகளை படகில் எடுத்து செல்கின்றனர். விசைப்படகு மூலம் இறால், நண்டு, சிங்கி இறால், பெரியவகை மீன்களான சுறா, கடல் விறால், வஞ்சிரம் உள்ளிட்ட மீன் வகைகள் பிடித்து வருவார்கள்.
இந்த நிலையில் 45 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற நாகைமீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அவர்களின் வலைகளில் அதிக அளவிலான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மீன் விலை குறைந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து நாகை கடுவையாற்றங்கரையில் நேற்று மீன் வாங்குவதற்காக மக்கள் அதிகமாக வந்தனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் 45 நாட்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து கடந்த 29-ந்தேதி நள்ளிரவு கடலுக்கு சென்றோம். அப்போது எங்களது வலைகளில் அதிக அளவில் மீன்கள் சிக்கின. இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது மீன் விலை குறைந்ததால் ஏமாற்றமாக உள்ளது என்றனர்.






