என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் தலையில் கல்லை போட்டு மருமகனை கொன்ற மாமியார்
    X

    காஞ்சீபுரத்தில் தலையில் கல்லை போட்டு மருமகனை கொன்ற மாமியார்

    தினமும் மது குடித்துவிட்டு வந்து மகளை சித்ரவதை செய்ததால் தலையில் கல்லை போட்டு மருமகனை கொலை செய்த மாமியார் போலீசில் சரணடைந்தார்.
    காஞ்சீபுரம்:

    சின்ன காஞ்சீபுரம் கொய்யாகுளம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் என்கிற லெப்ட் விநாயகம் (வயது 42). பிரபல ரவுடி. இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    விநாயகம் மீது விஷ்ணு காஞ்சி, சிவகாஞ்சி, காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையங்களில் 24 வழக்குகள் உள்ளன.

    இதில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக விநாயகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் தான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    விநாயகம் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து அடித்து உதைத்தார். இதனால் காமாட்சி தினமும் சித்ரவதையை அனுபவித்து வந்தார். எனவே அவர் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் நீலகண்டர் தெருவில் வசிக்கும் தனது தாய் கீதா வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று இரவு விநாயகம் மது குடித்து விட்டு மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவியை குடும்பம் நடத்த வருமாறு தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டார். அதன்பிறகு போதை அதிகமானதால் அங்கிருந்த திண்ணையிலேயே அவர் படுத்து தூங்கி விட்டார்.

    கணவர் செய்யும் சித்ரவதைகளை தனது தாய் கீதாவிடம் காமாட்சி சொல்லி அழுதார். இதனால் கீதாவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

    இன்று அதிகாலை 3மணி அளவில் கீதா கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது விநாயகம் திண்ணையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று ஆவேசம் அடைந்த கீதா, தூங்கிக் கொண்டிருந்த மருமகன் விநாயகம் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார்.

    பின்னர் அங்கிருந்து நேராக விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

    போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஸ்ரீநாத், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×