என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 லட்சத்துக்கு மேல் மரக்கன்றுகள் நட இலக்கு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம் கோட்டையூர் கிராமத்தில் வனத்துறையின் மூலம் மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளின் நாற்றாங் கால் பராமரித்து வரும் பணியினை கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:–
தமிழ்நாடு முதலமைச்சரின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு வனத்துறையின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் மூலம் மாவட்டந்தோறும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நட உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயத்தில் 34165 மரக்கன்றுகளும், புதுக்கோட்டையில் 79149 மரக்கன்றுகளும், கீரனூரில் 34164 மரக்கன்றுகளும், பொன்னமராவதியில் 56420 மரக்கன்றுகளும் மற்றும் அறந்தாங்கியில் 34165 மரக்கன்றுகளும் என 5 வனச்சரகங்கள் மூலம் 238063 மரக்கன்றுகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடவு செய்யவும், 25800 மரக்கன்றுகளை வனத்துறையின் மூலம் நடவு செய்யவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் இந்த ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 263863 மரக்கன்றுகள் நடபடவுள்ளது.
மேலும், திருமயம் வனசரகம் சார்பில் நாவல், நீர்மருது, மகாகனி, இலுப்பை, சிசு, புளியன், ஈட்டி, வேங்கை, வேம்பு, புங்கன், சிவப்புசந்தனம், தேக்கு, மகிலம், தூங்கவாகை மற்றும் தான்றி உள்ளிட்ட 39325 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வனத்துறையின் சார்பில் 5160 மரக்கன்றுகளும் மீதமுள்ள 34165 மரக்கன்றுகளை திருமயம் மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் நடுவதற்கு பகிர்ந்தளிக்கபடவுள்ளது.
மேலும் மரக்கன்றின் நாற்றாங்கால்களை முறையாக பராமரிக்கவும், புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் புதிய மரங்களை நட்டு வைத்து காடுகளின் பரப்பளவை அதிகப்படுத்தி தமிழகம் அதிக மழை பொழிவை பெற்று பசுமையான தமிழகத்தை உருவாக்கவும் முடியும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் தங்கராசு, திட்ட இயக்குநர்( மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சந்தோஷ்குமார், வனசரக அலுவலர்குமார், வனவர் பூமலை, கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.






