என் மலர்
செய்திகள்

டெல்டா மாவட்டத்தில் 3–வது நாளாக தொடர்மழை: நாகையில் புயல் கூண்டு ஏற்றப்பட்டது
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக இருந்து வந்த நிலையில் கடந்த 4–ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் வெயில் பொதுமக்களை வாட்டி வந்தது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதை தொடர்ந்து டெல்டா மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுகிறது. ஒரத்தநாடு, சாலியமங்கலம் பகுதிகளில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர் வளர்ந்துள்ள நிலையில் தற்போது பெய்த மழையினால் சில இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, பூதலூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருகிறது.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரியில் நேற்று மதியம் பலத்த மழை பெய்ததால் அங்கு வாக்குச்சாவடி அருகே இருந்த ஒரு தென்னைமரம் வேரோடு சாய்ந்து வாக்குச்சாவடி கூரையின் மீது விழுந்தது. இதில் ஓடுகள் உடைந்து விழுந்ததில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின் அவர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் 1 மணிநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. திருத்துறைப்பூண்டியில் நேற்று இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது. இன்றும் மழை பெய்து வருகிறது. திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்கிறது.
நாகை மாவட்டத்துக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 3–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அங்கு கடல் சீற்றமாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, கொள்ளிடம், பொறையாறு, கீவளூர் உள்பட மாவட்டத்தின் பலபகுதிகளிலும் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.






