என் மலர்
செய்திகள்

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: குமரி அனந்தன் மலர்தூவி மரியாதை
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாகிரக 86ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அங்குள்ள நினைவு தூணில் காங்கிரஸ் கட்சியினர்,பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. குமரி அனந்தன் தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் வேதாரண்யம் வடக்குவீதியில் உள்ள உப்புசத்தியாகிரக நினைவு கட்டிடத்திலிருந்து ஊர்வலமாக அகஸ்தியன்பள்ளிக்கு சென்றனர். வேதாரண்யத்திலிருந்து 5 கிலோ மீட்டர் ஊர்வலமாக சென்ற காங்கிரசார் வழிநெடுகிலும் தேசப்பக்தி பாடல்களையும் வந்தே மாதரம் கோஷத்தையும் முழங்கி சென்றனர். பின்பு அகஸ்தியன்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூணுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
வேதாரண்யத்தில் 1930–ம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ராஜாஜி, சர்தார் வேதரெத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு ஆங்கில அரசுக்கெதிராக உப்பு அள்ளும் போராட்டத்தை நடத்தினர். அதன் 86ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் முன்னாள் எம்.பி. குமரி அனந்தன், பி.வி.ராஜேந்திரன் சர்தார் வேதரெத்தினத்தின் பேரன்கள் வேதரெத்தினம், கேடிலியப்பன் மற்றும் உப்பு சத்தியாகிரக நினைவு கமிட்டி பொதுச் செயலாளர் சக்தி.செல்வகணபதி துணைத் தலைவர் சண்முகவடிவேல் மற்றும் நூற்றுக்கணக்கானோர் வந்தே மாதரம் கோஷங்களை எழுப்பி உப்பு அள்ளும் நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் நாகை மாவட்ட பொதுச்செயலாளர் சங்கரவடிவேலு மாவட்டசெயலாளர் போஸ், காங்கிரஸ் தொண்டர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். உப்பு சத்தியாகிரக பாதயாத்திரையில் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்திலிருந்து 5கிலோமீட்டர் உள்ள நினைவு தூண் வரை தொண்டர்களுடன் குமரி அனந்தன் நடந்து சென்றார்.
பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமுல்படுத்துவேன் என்று கூறியுள்ளனர். அப்படி செய்யாவிட்டால் நான் உறுதியோடு நின்று போராட்டம் நடத்துவேன். எந்த மாதிரி போராட்டம் என்று அப்போது கட்சிகாரர்களோடு கலந்து ஆலோசித்து நடத்துவேன். சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப் படங்களை அந்தந்தப் பகுதியிலுள்ள பள்ளிகளிலாவது வைக்க வேண்டும்.
அப்போதுதான் இளைய தலைமுறையினர் சுதந்திர போராட்ட வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். இதனை எனது வாழ்நாளின் மீதியுள்ள ஆயுட்காலப் பணியாக செய்வேன் என்றார்.






