என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேட்பாளர்களின் செலவுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு புதுக்கோட்டை கலெக்டர் உத்தரவு
    X

    வேட்பாளர்களின் செலவுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு புதுக்கோட்டை கலெக்டர் உத்தரவு

    வேட்பாளர்களின் செலவுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புதுக்கோட்டை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணிப்பது தொடர்பாகவும் மற்றும் வெளிமாநில தேர்தல் செலவு பார்வையாளர்கள் வருகை தரும் பொழுது மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர்கள் தலைமையில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பினை கலெக்டர் துவக்கி வைத்து பேசியதாவது:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகின்ற மே16ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1511 வாக்குச்சாவடிகள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அதிகாரி, வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் 1,2,3 மற்றும் 4 ஆகியோர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த அரசு அலுவலர்கள் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் என மொத்தம் 7291 நபர்களை அவர்களுக்கான விபரங்கள் பதவியின் அடிப்படையில் முதற்கட்டமாக கணினி மூலம் 19.04.2016 அன்று தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் இவர்கள் எந்த சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். முதற்கட்ட பயிற்சி வகுப்புதிருமயம் சட்டமன்ற தொகுதிக்கு திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் பயிற்சி வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய நாள் வரை செய்யப்படும் செலவினங்கள் அந்தந்த அரசியல் கட்சியின் செலவு கணக்கிலும், வேட்பு மனு தாக்கல் செய்த நாள் முதல் வாக்கு எண்ணிக்கை நாள் வரை செய்யப்படும் செலவுகள் வேட்பாளர் செலவு கணக்கிலும் சேர்க்கப்பட வேண்டும். பறக்கும் படை, வீடியோ கண்காணிப்புக்குழுவினர் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் போன்ற பல்வேறு தேர்தல் பிரச்சாரங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை, கொடிகள், பயன்படுத்தப்படும் வாகனங்கள், உணவு, ஒலிபெருக்கிகள் போன்ற பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் மிகத்தெளிவாக வீடியோவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு காவல் துறையினர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    மேலும் இவ்வாறு எடுக்கப்படும் வீடியோவினை செலவின மதிப்பீட்டுக்குழு மிகத்தெளிவாக ஆராய்ந்து ஒவ்வொரு பொருளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள செலவின கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள தொகைகளை மிக சரியாக குறிப்பிட்டு இதன் அனைத்து அறிக்கைகளையும் தனித்தனி பதிவேடுகளாகவும், குறுந்தகடுகளாகவும் பராமரித்து அதன் தகவல்களை தேர்தல் செலவின பார்வையாளரிடம் காண்பிக்க வேண்டும். இதுவரை அரசியல் கட்சியினர் மேற்கொண்ட தேர்தல் செலவினங்கள் குறித்த அறிக்கையை தயார் நிலையில் வைத்திருப்பதுடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.28 இலட்சம் மதிப்பில் மட்டுமே தேர்தல் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும்.

    எனவே, அனைத்து குழுக்களும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாக கண்காணித்து தேர்தலை நேர்மையாக நடத்திட முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பயிற்சி வகுப்பில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சூரியகலா (திருமயம்), வடிவேல்பிரபு (இலுப்பூர்), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆரமுத தேவசேனா, ரவிச்சந்திரன், மனோகரன், தமிழ்மணி, வட்டாட்சியர்கள் திருமலை, சுவாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×