என் மலர்
செய்திகள்

பண்ருட்டி சட்டசபை தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் தி.மு.க வினர் அதிருப்தி
பண்ருட்டி:
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி கடந்த 2009–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பண்ருட்டி நகராட்சி, நெல்லிக்குப்பம் நகராட்சி, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி, தொரப்பாடி பேரூராட்சி, அண்ணாகிராம ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 44 கிராம ஊராட்சி, பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 14 ஊராட்சிகள் இணைந்து புதிய தொகுதியாக உருவெடுத்துள்ளது. இந்த புதிய பண்ருட்டி தொகுதியில் 2011 –ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வெற்றிப்பெற்றது.
தற்போது வருகிற மே 16–ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான விவசாய தொழிலாளர்கள் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு கொடுத்திருந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
தொகுதியை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தாமல் கூட்டணிக்கட்சி ஒதுக்கி பண்ருட்டி தொகுதி புறக்கணிக்கப்பட்டதாக திமுகவினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பண்ருட்டி சட்ட மன்ற தொகுதியை பொறுத்தவரையில் இந்த தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடுகிறது.
இதுவரையில் கூட்டணி கட்சியின் வெற்றிக்கே பாடுபட்ட அதிமுகவினர் பல ஆண்டுகளுக்கு பிறகு சொந்த கட்சி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னதில் வாக்கு கேட்கப்போகும் உற்சாகத்தில் உள்ளனர்.






