என் மலர்
செய்திகள்

மணல் அள்ள தடையால் மானாமதுரை பகுதியில் கட்டுமான தொழில் பாதிப்பு
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்று பகுதியில் கட்டுமான தொழிலுக்காக மாட்டு வண்டிகளில் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை வைகை ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது மணல் அள்ள தடை விதிக்கப்பட்டதால் மாட்டு வண்டி கூலி தொழிலாளர்கள் பெரிதும் அவதிபட்டு வருகின்றனர். மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டதால் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சிறிய வீடுகள் கட்ட, வீடு மற்றும் கட்டிடங்கள் மராமத்து பணிகளுக்கு மணல் கொண்டு வர முடியாமல் பணிகள் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது.
மானாமதுரையில் உள்ள மாட்டு வண்டி கூலி தொழிலாளர் சங்கம சார்பில் மானாமதுரை தாசில்தாரிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:–
மாட்டு வண்டி தொழிலை நம்பி 30 குடும்பங்கள் தற்போது வேலையின்றி அவதிபட்டு வருகிறோம். கட்டுமான தொழில் பாதிப்படையாமலும் எங்கள் வாழ்வாதாரம் பாதிப்படையாமலும் இருக்க வைகை ஆற்றில் அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் மாட்டு வண்டிகளில் குறிப்பிட்ட அளவு மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்.
பிற மாவட்டங்களில அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி உள்ளது. கட்டுமான தொழில் தடையின்றி நடைபெற மாட்டு வண்டிகளில் மணல் அள்ள விதிக்கப்பட்ட தடை நீக்கி அனுமதித்தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






