என் மலர்
செய்திகள்

வில்லியனூர் அருகே என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வீட்டுக்கு தீவைப்பு: போலீசார் விசாரணை
வில்லியனுர்:
வில்லியனுர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது38).என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர். இவர் தனது வீட்டு மாடியில் உள்ள கூரை கொட்டகையில் வசித்து வந்தார். நேற்று இரவு இவர் தனது மனைவி அருள்மொழி மற்றும் 2 குழந்தைகளுடன் தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவில் திடீரென இந்த கூரை கொட்டகை தீப்பிடித்து எரிந்தது.
உடனே பார்த்தசாரதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அலறியடித்தபடி அங்கிருந்து வெளியேறினர். அங்குள்ள கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் வைத்திருந்த பீரோ, கட்டில், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் எரிந்து சேதமானது. பீரோவில் வைத்திருந்த ரூ.16ஆயிரத்து 500 ரொக்க பணமும் தீயில் கருகி போனது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.
இதுகுறித்து பார்த்தசாரதி வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது வீட்டுக்கு யாரேனும் தீவைத்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறினார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






