என் மலர்
செய்திகள்

மாமல்லபுரம் அருகே பறக்கும் படையினர் சோதனையில் ரூ.21 லட்சம் சிக்கியது
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ள கூத்தவாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் வட்டாட்சியரும் தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான விமல்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கட்டு கட்டாக ரூ.21லட்சம் பணம் இருந்தது.
காரில் இருந்த 3 பேரிடம் விசாரித்த போது, தனியார் நிதி நிறுவனம் சார்பில் வசூல் செய்யப்படும் டாஸ்மாக் பணம் என கூறினர்.
ஆனால் அதற்கான ஆவணங்களை காட்ட மறுத்தனர் இதனால் பணத்தையும் காரையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தகவல் அறிந்ததும் கிண்டியில் உள்ள தனியார் நிதி கையாளும் நிறுவன அதிகாரிகள் பணம் வசூலித்த டாஸ்மாக் கடை விபரங்கள் மற்றும் பணத்தை செலுத்த போகும் வங்கியின் விபரங்களை கொடுத்தனர்.
இதையடுத்து பணத்தையும் காரையும் போலீசார் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பத்தில் தேர்வாய்–கண்டிகை கண்ணன் கோட்டை தனி வட்டாட்சியர் சுரேஷ்பாபு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்தவர்களிடம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரொக் கம் இருந்தது.
அதில் இருந்தவர்களிடம் விசாரித்த போது திருச்சியில் ஜே.சி.பி. எந்திரம் வாங்க அட்வான்ஸ் கொடுப்பதற்காக பணத்தை எடுத்து சென்றதாக தெரிவித்தார். ஆனால் பணத்திற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை.
இதையடுத்து ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.






