என் மலர்
செய்திகள்

சமூக வலைதளங்களில் பரவிய புதுவை சப்–இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கும் காட்சி
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை சப்–இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஆறுமுகம். இவர் போலீஸ் நிலையத்தில் தனது இருக்கையில் இருந்தபடியே பேரம் பேசி லஞ்சம் வாங்கும் வீடியோ பதிவு நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்–அப் ஆகியவற்றில் பரவியது.
2 நிமிடம் 50 நொடிகள் இந்த காட்சி ஓடுகிறது. உருளையன் பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது இருக்கையில் சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் அமர்ந்துள்ளார். அவரது எதிரே ஒரு நபர் அமர்ந்து பேசுகிறார். அவரது முகம் வீடியோவில் பதிவாகவில்லை. அப்போது ஒருவர் வந்து சப்–இன்ஸ்பெக்டரிடம் கையெழுத்து பெறுகிறார். இதைத் தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் எதிரில் உள்ள நபரிடம் கொடுங்கள் என கை நீட்டுகிறார்.
எதிரே இருக்கும் நபர் எவ்வளவு? என கேட்கிறார். சப்–இன்ஸ்பெக்டர் மெல்லிய குரலில், ரூ.30 ஆயிரம் தரும் படி கூறுகிறார். எதிரே உள்ள நபர் ஆயிரம் ரூபாய் தாளை ஒன்று, இரண்டு என 30 தாள்களை எண்ணி ஆறுமுகத்திடம் கொடுத்தார்.
இதை குமாரிடம் கொடுத்து விடுவீர்களா? என கேள்வி கேட்கிறார். தொடர்ந்து மீண்டும் எவ்வளவு? என கேட்கிறார். அதற்கு ஆறுமுகம் சைகையில் 10 விரலை காட்டுகிறார். யார், யாருக்கு? என கேட்கிறார். அதற்கு ஆறுமுகம், மொத்தமாகத்தான் என கூறுகிறார்.
வேறு யாராவது வந்து என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது? இது உங்களுக்கு மட்டும்தானா? என அந்த நபர் கேட்கிறார். அதற்கு ஆறுமுகம், உங்கள் வேலையை பாருங்க, நாங்க பார்த்துக்கொள்கிறோம் என்கிறார்.
இதையடுத்து எதிரே இருந்த நபர் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, ஏட்டு, ரைட்டர் எல்லாருக்கும் கொடுத்துவிடுவீர்களா? என கேட்கிறார். அதற்கு ஆறுமுகம், சைகையாலேயே கொடுங்கள் என கூறுகிறார். இதையடுத்து அந்த நபர் மீண்டும் ஆயிரம் தாள்களை ஒன்று, இரண்டு என எண்ணி 10 தாள்களை கொடுக்கிறார். அப்போது குமாரிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கிவிட்டீர்களா? என அந்த நபர் கேட்கிறார்.
இதைத்தொடர்ந்து ஆறுமுகம் குமாரை கூப் பிடுகிறார்? அவர் வந்தவுடன் ஒரு கோப்பில் கையெழுத்து வாங்கிவிட்டு, பணம் கொடுத்த நபரிடமும் ஆறுமுகம் கையெழுத்து வாங்குகிறார். வாங்கிய பணத்தை ஆறுமுகம் தனது டிராயரில் வைத்துக் கொள்கிறார். இவ்வாறு அந்த வீடி யோவில் காட்சிகள் ஓடுகிறது.
நெல்லித்தோப்பு அருள் படையாட்சி வீதியை சேர்ந்தவர் செந்தில். என்ஜினீயரான இவரிடம் குமார் என்பவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கும், என்ஜினீயருக்கும் ஆட்களுக்கு சம்பளம் வழங்கியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குமார், வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யும்படி புகார் கொடுத்தார். இந்த புகாரின் மீது விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் என்ஜினீயர் செந்திலை சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் போனில் அழைத்து, இந்த புகாரை பதிவு செய்யாமல் குமாருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த அழைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் நடந்த சம்பவங்களையே செந்தில் தனது செல்போன் படம்பிடித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.






