என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம், நாமக்கல்லில் ரூ.150 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கம்- மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- உற்பத்தி செய்யப்படும் துணியின் விலை 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கிறது.
- கடந்த 3 மாதங்களில் ஜவுளி ரகங்கள் விற்பனை இன்றி தேங்கி கிடக்கின்றன.
நாமக்கல்:
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி உற்பத்தியில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிலில் ஒரு கோடிக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்ப ரில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.54 ஆயிரத்துக்கு விற்றது. பருத்தி விளைச்சல் குறைந்த தால் பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ஒரு கேண்டி பஞ்சு ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரை சென்றது.
இதனால் நூல்களின் உற்பத்தி குறைந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்து சரிந்தது. இதன் காரணமாக ஜவுளி உற்பத்தி 50 முதல் 60 சதவீதம் சரிந்தது. பஞ்சு விலையை குறைக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள், நூல் வியாபாரிகள் மில் அதிபர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர்.
ஆனால் அதற்கு மாறாக பஞ்சு விலை மீண்டும் ஏறியது. பின்னால் பருத்தி விளைச்சல் அதிகரிப்பால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் பஞ்சு விலை குறை தொடங்கியது. அப்போது ஒரு கேண்டி பஞ்சு ரூ.80 ஆயிரம் ஆனது.
தற்போது மார்க்கெட்டில் ஒரு கேண்டி பஞ்சு ரூ. 72 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. பஞ்சு விலை சரிந்து வருவதால் கடந்த சில மாதமாக தமிழகத்தில் பல பகுதிகளில் ஜவுளி உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்திக்கு ஏற்ப விற்பனை இல்லாததால் ஜவுளிகள் தேக்கம் அடைந்து, தொழில் முடங்கி உள்ளது.
இதனால் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும் என்பது உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 150 கோடிக்கு மேல் ஜவுளிகள் தேங்கியுள்ளதாகவும், ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் கூறியிருப்பதாவது,
சேலம், நாமக்கல், கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர், விருதுநகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இத்தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உற்பத்தியாகும் விசைத்தறி ஜவுளிகளின் காட்டன் ரகங்கள் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஆஸ்திரேலியா நாடுகளுக்கும், இந்தியாவில் டெல்லி, மேற்கு வங்காளம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மாநிலங்களுக்கும் துண்டு லுங்கிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு ஜவுளி ஏற்றுமதியும் முடங்கியுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறி நெசவு தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் மாற்று தொழிலை தேட தள்ளப்பட்டுள்ளனர்.
பல பகுதிகளில் விசைத்தறி கூடங்கள் பூட்டி கிடக்கின்றன. விசைத்தறி நெசவு தொழில் மீண்டும் புத்துயிர் பெருமா? என்பது சந்தேகமாக உள்ளது.
உலக நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி 4 சதவீதம் என்பது வேதனை அளிக்கிறது. இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதி உச்சத்தில் இருந்தது. அதன்பின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி பருத்திக்கு வரி, நூலுக்கு வரி, உற்பத்தி செய்யப்படும் ஜவுளிக்கு வரி என பல அடுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது.
அதனால் உற்பத்தி செய்யப்படும் துணியின் விலை 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கிறது. மேலும் நூல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் விசைத்தறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 மாதங்களில் ஜவுளி ரகங்கள் விற்பனை இன்றி தேங்கி கிடக்கின்றன. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 150 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளிகள் தேக்ககமடைந்துள்ளன.
தமிழகத்தின் ஒரு கோடி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளின் கடமை. ஜவுளி துறைக்கான தனி அமைச்சர் நியமித்து ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிக்க வேண்டும். பஞ்சு ஏற்றுமதி செய்வதை தவிர்த்து ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க செய்ய வேண்டும்.
தற்போதைய நிலை தொடர்ந்தால் விசைத்தறி ஜவுளி தொழில் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும். மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






