search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்
    X

    ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்

    • தருமபுரி மாவட்டத்திற்கு 5 நபர்களுக்கு 7 லட்சம் வீதம் 35 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
    • நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    தருமபுரி,

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 2022-2023 நிதி ஆண்டில் ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறுகள் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தர தருமபுரி மாவட்டத்திற்கு 5 நபர்களுக்கு 7 லட்சம் வீதம் 35 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    எனவே தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் -2022-23இல் (அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் பணிகள் மேற்கொள்ள பாதுகாப்பான குறுவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில்) அரூர் வட்டம் தீர்த்தமலை குறுவட்டத்தில் வேப்பட்டி, பெரியப்பட்டி, வீரப்ப நாயக்கம்பட்டி மற்றும் பென்னாகரம் வட்டம் ஏரியூர் குறு வட்டத்தில் இராம கொண்ட அள்ளி, கோடி அள்ளி கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    எனவே, இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் மானாவாரி விவசாயிகள் குறைந்தது ( 1 முதல் 5 ஏக்கர் வரை) உரிய வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்ட சிறு,குறு விவசாயி சான்று பெறப்பட வேண்டும். சாத்தியமுள்ள இடங்களில் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட் (அதிகபட்சம் 10 குதிரைத்திறன் வரை) அமைத்து தரப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தல் நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் , சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மேற்குறிப்பிட்ட 5 ஊராட்சிகளை சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளாக உள்ள ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன் பெறும் வகையில், பாசன அமைப்புகளை உருவாக்கி தங்களது நிலத்தில் சாகுபடியினை மேற்கொள்ள வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தினை வேளாண் பெருமக்கள் பயன்படுத்திட அலுவலகங்களை அணுகி பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×