search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் நாளை ஜெயலலிதா பிரசாரம்: 17 வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்
    X

    சேலத்தில் நாளை ஜெயலலிதா பிரசாரம்: 17 வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்

    6–வது தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலத்தில் நாளை 17 வேட்பாளர்களை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.

    சேலம் :

    தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அ.தி.மு.க.சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்களையும், அ.தி.மு.க.கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். முதலில் சென்னையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஜெயலலிதா, அதன்பிறகு விருதாச்சலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் செய்தார்.

    இதைத்தொடர்ந்து 6–வது தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலத்தில் நாளை (புதன்கிழமை) மதியம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், வீரபாண்டி, இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஏற்காடு (தனி), ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி) ஆகிய 11 தொகுதிகளின் வேட்பாளர்களையும், நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளின் வேட்பாளர் களையும் அறிமுகப்படுத்தி முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார்.

    இதற்காக சேலம்சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி பகுதியில் ஆவத்திப்பாளையம் என்ற இடத்தில் 70 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் நாளை (புதன்கிழமை) மதியம் சேலம் வருகிறார்.

    இதற்காக பொதுக்கூட்டம் நடக்கும் மேடைக்கு அருகே ஹெலிபேடு தளம் அமைக்கப்பட்டு உள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சை கேட்க வரும் அ.தி.மு.க.தொண்டர் களும், பொதுமக்களும் சிரமமின்றி வந்து செல்ல வசதியாக கூட்டம் நடைபெறும் பகுதியில் தடுப்புக்கட்டைகளால் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை முதல் ஹெலிபேடு வரை இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டம் நடைபெறும் மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் அமருவதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.

    பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து, தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாதுகாப்பு பணிக்காக சேலம் மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக வருகைதர உள்ளனர்.

    இதனிடையே, பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.ஸ்ரீதர் தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி.நாகராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்புலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். ஹெலிபேடு, தார்சாலை, பந்தல் அமைக்கும் பணி, மக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று தீவிர சோதனையிட்டனர்.

    Next Story
    ×