search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணியில் த.மா.கா. இணைந்தது: 26 தொகுதிகள் ஒதுக்கீடு
    X

    தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணியில் த.மா.கா. இணைந்தது: 26 தொகுதிகள் ஒதுக்கீடு

    தமிழக சட்டமன்றத் தேர்தலின் புதிய திருப்பமாக மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க. அணியில் த.மா.கா. இணைந்துள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலில் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா.வின் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம்பெறும் என்று கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை நிபந்தனை விதித்ததால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    அதன் பின்னர் தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகிய அணிகளில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. ஆனால், அதுவும் தடைபட்டது. கடைசியாக தே.மு.தி.க–மக்கள் நலக் கூட்டணியில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. நேற்று மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவுடன் த.மா.கா. தலைவர் வாசன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தே.மு.தி.க. கூட்டணியில் சேர விரும்புவதாக வாசன் தெரிவித்தார். அப்போது அவர் த.மா.கா.வுக்கு 40 தொகுதிகள் வரை ஒதுக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து வைகோ உடனே விஜயகாந்தை சந்தித்து த.மா.கா.வும் கூட்டணிக்கு வர இருக்கும் தகவலை தெரிவித்தார். த.மா.கா.வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம்? அந்த தொகுதி பங்கீட்டை எப்படி மேற்கொள்வது என்று இருவரும் ஆலோசித்தனர்.

    இந்நிலையில் கூட்டணி குறித்து இறுதி செய்வதற்காக மக்கள் நல கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இன்று பிற்பகல் வாசனை சந்தித்தனர். அப்போது கூட்டணி குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி உறுதியானது. இதையடுத்து வாசன் மற்றும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்குக் சென்று விஜயகாந்தை சந்தித்தனர்.

    இந்த சந்திப்பின்போது, மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க. அணியில் த.மா.கா. இணைவது உறுதி செய்யப்பட்டது. த.மா.கா.வுக்கு 26 தொகுதிகளை வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி இடையே தே.மு.தி.க. 124 தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணி 110 இடங்களிலும் போட்டியிடுவது என்று ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதில் மக்கள் நலக்கூட்டணியில் மொத்தம் உள்ள 110 தொகுதிகளில் ம.தி.மு.க.வுக்கு 32 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய 3 கட்சிகளுக்கு தலா 26 இடங்கள் என்று முடிவு செய்திருந்தனர்.

    தற்போது த.மா.கா. இணைந்ததையடுத்து தே.மு.தி.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகிய 5 கட்சிளும் தங்கள் தொகுதிகளில் இருந்து த.மா.கா.வுக்கு தொகுதிகளை பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தே.மு.தி.க. தன்னிடம் உள்ள 124 தொகுதிகளில் 20 தொகுதிகளை த.மா.கா.வுக்கு கொடுத்துள்ளது.

    அதுபோல ம.தி.மு.க. 3 தொகுதிகளையும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய ஒரு தொகுதிகளையும் த.மா.கா.வுக்காக விட்டுக்கொடுத்துள்ளது. இதன்மூலம் த.மா.கா.வுக்கு 26 தொகுதிகள் கிடைத்துள்ளன.

    தே.மு.தி.க. - மக்கள் நல கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வருமாறு:

    தே.மு.தி.க. - 104
    ம.தி.மு.க. -29
    விடுதலை சிறுத்தைகள் - 25
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 25
    இந்திய கம்யூனிஸ்ட் - 25
    தமிழ் மாநில காங்கிரஸ்-26.
    Next Story
    ×