என் மலர்
செய்திகள்

தினகரன் மீதான புகார் ஆதாரம் இல்லாதது: சுப்பிரமணியசாமி பேட்டி
ஆலந்தூர்:
பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரும், மேல்-சபை எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டி.டி.வி. தினகரன் மீது டெல்லி போலீசாரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. அது வழக்கு என்று சொல்ல முடியாது. யார் குற்றம் சாட்டினாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம். அதன் மீது விசாரணை நடத்தி 'சார்ஜ்சீட்' பதிவு செய்த பின்னர்தான் வழக்கு வரும்.
தேர்தல் ஆணையத்திடம் பணம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை தர வேண்டும் என்று யாரோ ஒருவர் பணம் கொடுத்ததாக டி.டி.வி. தினகரன் மீது குற்றம் சாட்டி உள்ளார். இது ஆதாரம் இல்லாதது.
அ.தி.மு.க.வில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் மட்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ. அவருக்கு எந்த அந்தஸ்தும் கிடையாது.
அப்படி இருக்கும்போது எந்த ஆதாரத்தில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது என்று புரியவில்லை.
இந்த தடை தேர்தல் ஆணையத்தின் தவறான தீர்ப்பு. இது சசிகலா தலைமையிலான கட்சிக்கு எதிராக உள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தின் பின்புலத்தில் பா.ஜனதா இருக்கிறது என்பதில் உண்மை இல்லை. கட்சியில் சில பேர் இருக்கலாம்.
நான் ஏற்கனவே சொன்னபடி டெல்லியில் 2 அமைச்சர்களும் சென்னையில் ஒருவரும் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் இரு அணிகள் என்பது கிடையாது. ஓ.பன்னீர்செல்வம் தனி மனிதர். அவருக்கு ஆதரவாக எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்று கவர்னரிடம் காட்ட வில்லையே. சட்டசபையில் சசிகலா தலைமையிலான கட்சிக்கு தனி மெஜாரிட்டி இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
அது தமிழ்நாட்டின் பிரச்சினை. மாநில அரசு தான் தீர்வு காண வேண்டும். தமிழக முதல்- அமைச்சர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண என்னால் முடியாது என்று பிரதமரிடம் கூறினால் இதுபற்றி அவர் முடிவு எடுப்பார்.
விவசாயிகளின் போராட்டத்தை யாரோ பின்னால் இருந்து இயக்கி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தெரிய வேண்டும்.
தி.மு.க. அனைத்து கட்சிகளையும் கூட்டி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதால் எந்த பயனும் இல்லை. சாமானிய மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.
இந்த 'பந்த்' கம்யூனிஸ்டு போன்ற மனப்பான்மை உடையது. தமிழகத்தில் தி.மு.க. 6 முறை ஆட்சியில் இருந்தும் இதுதான் விவசாயிகளின் நிலை.
இவ்வாறு அவர் கூறினார்.