என் மலர்
செய்திகள்

டி.டி.வி.தினகரனின் அரசியல் பயணம் முடிந்தது: கே.பி.முனுசாமி பேட்டி
சென்னை:
கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் பணம் பட்டுவாடா செய்தது உலகத்திற்கே தெரியும். தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக 6 அமைச்சர்களை பலிகடாவாக்கி விட்டார்.
பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரத்தில் டாக்டர் பாலாஜி ரூ. 5 லட்சம் வாங்கிய உண்மையை கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது அமைச்சர்கள் மட்டும் பணப்பட்டுவாடா செய்யவில்லை என்பது முரண்பாடாக உள்ளது.
பணப்பட்டுவாடா செய்ய வில்லை என்று டி.டி.வி. தினகரன் பொய்யான தகவல்களை கூறி வருகிறார். அவரது அரசியல் பயணம் முடிந்து விட்டது.
எப்போது அங்கு தேர்தல் நடந்தாலும் மதுசூதனன் 1 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தி.மு.க.வும் வாக்காளர்களுக்கு ரூ.2000 கொடுத்துள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் வெற்று காகிதங்கள் அல்ல. அவை அனைத்தும் உண்மை. அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கைப்பற்றிய ஆவணங்களில் உள்ள தகவல் அனைத்தும் உண்மையானவை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மதுசூதனன், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மா.பாண்டியராஜன், ஜே.சி.டி.பிரபாகர், வக்கீல் மனோஜ்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.