search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ரத்து: ஆர்.கே.நகரில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கருத்து
    X

    தேர்தல் ரத்து: ஆர்.கே.நகரில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கருத்து

    ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து குறித்து அங்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் மதுசூதனன், மருது கணேஷ், கங்கை அமரன், ஜெ.தீபா, லோகநாதன், மதிவாணன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
    சென்னை:

    மதுசூதனன் (அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி):- பண பட்டுவாடா செய்த டி.டி.வி. தினகரன் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் தேர்தலையே ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோல்வி பயத்தில் டி.டி.வி.தினகரன் பண பட்டுவாடா செய்து தேர்தலை ரத்து செய்ய வைத்துள்ளார்.

    ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தல் நடைபெறும்போது நானே மீண்டும் போட்டியிடுவேன்.

    தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ்:- ‘தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளே என்னுடைய நிலைப்பாடு.’.

    கங்கை அமரன்(பா.ஜ.க.):- ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெற்றிருந்தால் நான் அமோக வெற்றி பெற்றிருப்பேன். எனினும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை நான் மனதார வரவேற்கிறேன். ‘எனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும் என்பது போல நாட்டு மக்களுக்கு பண பட்டுவாடா குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

    பண பட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் மீது தேர்தல் கமிஷன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் போது நான் உறுதியாக போட்டியிடுவேன்.



    ஜெ.தீபா(எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவை):- குற்ற பின்னணி உள்ள டி.டி.வி. தினகரனை தேர்தலில் போட்டியிட அனுமதித்திருக்க கூடாது. நான் தேர்தலில் போட்டியிட கூடாது என்று பல்வேறு சதிகளை அவர்கள் செய்தனர். தற்போது பண பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்பது தொகுதி மக்களின் விருப்பம். எனவே மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் போது நான் போட்டியிடுவேன்.



    லோகநாதன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):- பண பட்டுவாடா புகாரில் சிக்கியவர்களை தகுதிநீக்கம் செய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பொருளாதாரத்தில் பின் தங்கிய எங்களை போன்ற வேட்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    மீண்டும் தேர்தல் நடைபெறும் போது வெளியூர் வாகனங்களை தொகுதிக்குள் அனுமதிக்க கூடாது. தேர்தல் அறிவிப்பு மீண்டும் வெளியிடப்படும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிலைப்பாடு குறித்து மாநில செயற்குழு முடிவு எடுக்கும்.



    மதிவாணன்(தே.மு.தி.க.):- பண பட்டுவாடாவில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரனை தகுதிநீக்கம் செய்யாமல் தேர்தலை ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தவறு செய்தவரை தகுதி நீக்கம் செய்யாமல் இருப்பது தேர்தல் கமிஷனின் முறையற்ற செயல் ஆகும். மீண்டும் இடைத்தேர்தல் நல்ல முறையில் நடைபெற வேண்டும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விரும்பினால் நான் மீண்டும் வேட்பாளராக களம் இறங்க தயாராகவே இருக்கிறேன்.

    Next Story
    ×