search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்: ஜெ.தீபா
    X

    ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்: ஜெ.தீபா

    எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன், தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக இந்த தொகுதியை மாற்றிக்காட்டுவேன் என்று ஜெ.தீபா கூறினார்.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா தலைமை தாங்கினார்.



    பின்னர் அவர் பேசியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா மீது பாசம் கொண்ட பொதுமக்கள் அழைத்ததால் போட்டியிடுகிறேன். அவரை வெற்றி பெற செய்தது போல் என்னையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் தமிழகத்தில் முன்மாதிரியான தொகுதியாக இந்த தொகுதியை மாற்றிக்காட்டுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் நடந்து வரும் பினாமி ஆட்சியை அகற்றிவிட்டு மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாலை 3 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட கூட்டத்திற்கு, 5 மணி நேரம் காலதாமதமாக இரவு சுமார் 8 மணி அளவில் ஜெ.தீபா வந்தார். அவரை படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்கள் மற்றும் டி.வி. கேமராமேன்களை அவருடைய பாதுகாவலர்கள் தள்ளி விட்டதால், பத்திரிகையாளர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது படம் எடுத்துக் கொண்டு இருந்த பத்திரிகை போட்டோகிராபர்கள் மீது தண்ணீர் பாட்டில்களும் வீசப்பட்டன. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பத்திரிகையாளர்கள் பலர் கூட்டத்தை விட்டு வெளியேறினர். ஆனால் இதுகுறித்து ஜெ.தீபா மற்றும் மாதவன் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் எவரும் வருத்தம் தெரிவிக்காதது பத்திரிகையாளர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    கூட்டத்தில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன், ஆதரவாளர்கள் ராஜா, இ.சி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×