search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் நாளை அறிவிப்பு
    X

    ஆர்.கே.நகர் தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் நாளை அறிவிப்பு

    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட பலம் வாய்ந்த ஒருவரை தி.மு.க. வேட்பாளராக தேர்வு செய்து நாளை அறிவிக்க தி.மு.க. மேலிடம் முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவது உறுதியாகி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் பலம் வாய்ந்த ஒருவரை வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளது.



    ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த முறை ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் 57 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார்.

    இந்த முறை போட்டியிடுவதற்கும் முதல் ஆளாக மனு வாங்கியுள்ளார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகளான சிம்லா முத்துச்சோழனுக்கே இந்த முறையும் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. சட்டதுறை செயலாளர் வக்கீல் கிரிராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.

    ஆனால் தி.மு.க.வில் புதுமுக வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க.வில் தினகரன் போட்டியிடும் பட்சத்தில் அவரை எதிர்த்து கடுமையான போட்டியை ஏற்படுத்தும் ஒருவரையே வேட்பாளராக நிறுத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

    தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பது இன்று தெரிந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேட்பாளர் தேர்வில் தி.மு.க. பொறுமை காத்து வருகிறது. பலம் வாய்ந்த ஒருவரை தி.மு.க. வேட்பாளராக தேர்வு செய்து நாளை அறிவிக்க தி.மு.க. மேலிடம் முடிவு செய்துள்ளது.



    1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் சற்குண பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். அதன் பின்னர் தி.மு.க.வுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

    எனவே இந்த முறை எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் தி.மு.க.வினர் ஆர்.கே.நகர் தொகுதியில் மல்லுக்கட்டுவார்கள். இதனால் தேர்தல் நேரத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் அனல்பறக்கும்.

    Next Story
    ×