search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘நீட்’ தேர்வை தி.மு.க. அரசியல் ஆக்குகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    ‘நீட்’ தேர்வை தி.மு.க. அரசியல் ஆக்குகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

    மாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் ‘நீட்’ தேர்வை தி.மு.க. அரசியல் ஆக்குவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு முறையை தமிழகத்தில் தடுப்பது மாணவர்களின் வளர்ச்சியை தடுப்பதற்கு சமம்.

    கடந்த ஆண்டு தமிழில் தேர்வு எழுத முடியாததால் எதிர்ப்பதாக கூறினார்கள். இந்த ஆண்டு தமிழிலும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. இனி என்ன பிரச்சனை?

    எல்லோரும் சிந்திக்க வேண்டியது மாணவர்களின் தகுதியையும், திறமையையும் உயர்த்துவது எப்படி என்பதாகத்தான் இருக்க வேண்டும்.

    கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள். இதற்கு யார் காரணம்? கிராமப்புற மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எதுவும் செய்யவில்லை என்பதுதானே. கிராமப்புற மாணவர்கள் காலமெல்லாம் இப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அரசியல் லாபத்துக்காக மாணவர்களை தவறாக வழி நடத்தாதீர்கள்.

    ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும் மாணவர்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேற உற்சாகப்படுத்த வேண்டும். அரசியல் வேறு. மாணவர்கள் நலன் வேறு.

    மாணவர்கள் விதை நெல் போன்றவர்கள். அடுத்த தலைமுறையை உருவாக்குபவர்கள். அவர்களை அதற்கேற்ற தகுதியுடன் தயார் படுத்த வேண்டியது நமது கடமை. அந்த கடமையில் இருந்து தவறுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்.

    இரண்டு திராவிட கட்சிகளும் 50 ஆண்டு காலம் செய்த தவறு நமது மாணவர்களை பாதித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதில் காட்டிய அக்கறையை அரசு பள்ளிகளை தரம் உயர்த்த ஏன் காட்டவில்லை? புற்றீசல் போல் தனியார் பள்ளிகளை அனுமதித்து அரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு கொண்டு வந்தீர்கள். ஏழை மாணவர்கள் தரம் உயர என்ன வசதி செய்து கொடுத்தீர்கள்?

    எல்லா மாநிலங்களும் மாணவர்களை போட்டி போட்டு தயார் படுத்துகின்றன. ஆனால் படிப்பில் சிறந்தவர்கள் என்ற பெயருக்கு சொந்தமான நமது மாநிலத்தில் மாணவர்களின் திறமையை மழுங்கடிக்க முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. காலம் மாற மாற அதற்கேற்ற வகையில் மாற வேண்டியது அவசியம். இது மாணவர்களுக்கும் தெரியும். அவர்களை திசை திருப்பும் வேலையை விட்டு விட்டு அவர்கள் உயர்வதற்கு தோள் கொடுங்கள். யார் கெட்டாலும் பரவாயில்லை. நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற உணர்வில் தி.மு.க. செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×