search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி படத்தை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த போது எடுத்த படம்.
    X
    முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி படத்தை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த போது எடுத்த படம்.

    உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் கோ.சி.மணி: ஸ்டாலின் புகழாரம்

    உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் கோ.சி. மணி என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
    தஞ்சாவூர்:

    முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி கடந்த 2-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உருவ படத்திறப்பு நிகழ்ச்சி கும்பகோணம் வாணிவிலாச சபாவில் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கோ.சி. மணி படத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

    ஊராட்சி தலைவர், மாவட்ட செயலாளர், மேலவை உறுப்பினர், அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் கோ.சி. மணி. இதையெல்லாம் தாண்டி கருணாநிதியின் அன்புக்குரியவராக வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தவர்.

    அண்ணா, கருணாநிதி ஆகியோரிடத்தில் உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு கட்சி பணியாற்றியவர். அண்ணா, கருணாநிதியின் மன சாட்சியாக வாழ்ந்தவர்.

    தமிழ்நாட்டில் நகரம், பேரூர், ஊராட்சி, கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் குடிநீருக்காக நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடித்தளமிட்டவர் கோ.சி. மணி.

    இவர் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது தான் உள்ளாட்சியில் நல்லாட்சி காணப்பட்டது.

    ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக பணியாற்றி அதில் முன்னுதாரணமாக இருந்தவர். மனைவி இறந்த போது ஆறுதல் கூற சென்ற தினத்தில் கூட கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் தேர் ஓட வேண்டும். சாலையை சீரமைக்க வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    தி.மு.க.வின் லட்சியத்துக்காகவும், கொள்கைக்காகவும் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து சென்ற முன்னோடி. அவர் இறந்த போது அவரது இரு கண்கள் தானமாக பெறப்பட்டு அந்த கண்களின் லேஸ் மூலம் 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளதாக அரிமா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இதனால் கோ.சி. மணி நம்மிடையே தான் வாழ்ந்து வருகிறார். அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் துரை முருகன், கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மதிவாணன் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×