search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படை வேட்டை: வாக்களிக்க பணம்-பொருள் கொடுத்தால் கடும் நடவடிக்கை
    X

    பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படை வேட்டை: வாக்களிக்க பணம்-பொருள் கொடுத்தால் கடும் நடவடிக்கை

    அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர்:

    அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகளிலும் கடந்த 17-ந்தேதி முதல் பறக்கும் படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    தஞ்சாவூர் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை தாங்கிய கலெக்டர் அண்ணாத்துரை பேசியதாவது:-

    தஞ்சாவூர் தொகுதியில் தேர்தலை கண்காணிக்க 6 பறக்கும் படைகளும், 3 நிலையான குழுக்களும், 3 வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளன. மாவட்டத்தில் காவல் துறை மூலம் ஆங்காங்கே வாகன பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டும், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தேர்தல் குறித்த புகார்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பலாம். மேலும் 1077 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    ஒரு வேட்பாளர் ரூ. 28 லட்சம் மட்டுமே தேர்தலுக்கு செலவு செய்ய முடியும். வங்கிகளில் ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக பணம் எடுப்பது, பணம் செலுத்துவது போன்ற பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்.

    ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமான பணம் அல்லது ரூ. 10 ஆயிரத்துக்கு அதிகமான பொருட்களை கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்.

    வாகனத்தில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    அப்போது கலெக்டர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பணிக்காக 6 பறக்கும் படை குழுக்கள், 6 நிலையான குழுக்கள், 3 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக்குழு, செலவினக்குழு ஆகியவைகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    வாக்களிக்க பணமோ, பொருளோ கொடுப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகன சோதனையின் போது பொது மக்கள் 50,000 வரை பணம் எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் பணம் எடுத்துச் செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    திங்கட்கிழமை இரவில் இருந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இக்குழுக்கள் பணியாற்றி வருகின்றன. மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.
    Next Story
    ×