search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார்: ஜி.கே.மணி பேட்டி
    X

    இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார்: ஜி.கே.மணி பேட்டி

    இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று சேலத்தில் பா.ம.க.வின் மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. செயல் வீரர்கள் கூட்டம் இன்று சேலம் 5 ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்வதற்காக சேலத்திற்கு வந்த கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சனை குறித்து மத்திய நீர்வள கமி‌ஷனர் சி.எஸ்.ஷா தலைமையிலான காவிரி உயர் மட்ட தொழில் நுட்பக் குழு தனது அறிக்கையை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் தமிழகத்தை ஏமாற்றும் வகையில் உள்ளது.

    தமிழகத்தில் 80 விழுக்காடு மக்கள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் காவிரி நீரையே நம்பி உள்ளனர். டெல்டா விவசாயிகள் 3 போக சாகுபடி செய்து வந்தனர். ஆனால் இப்போது ஒரு போக சாகுபடி கூட செய்ய முடியாமல் வறட்சியில் உள்ளது.

    காவிரி நடுவன் மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும். மத்திய அரசு ஆட்சிக்கு வந்ததும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று கூறி விட்டு, 2½ ஆண்டுகள் காலம் தாழ்த்தி நாடளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்து அமைப்போம் என்று கூறியது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

    கிருஷ்ணா, கோதாவரி ஆகிய நதிகளை நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வராமல் வாரியம் அமைத்துள்ளனர். அடுத்து கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வருவதால் தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    இது தேசிய ஒருமைபாட்டிற்கும், இந்திய இறையாண்மைக்கும் மாறுபட்டதாகவும் சிதைப்பதாகவும் அமைகிறது.

    விவசாயிகள் பாதிக்கப்படுவதால் மத்திய - மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நிலத்தடி நீர் உயர்வதற்கு ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். தமிழ்நாட்டின் எல்லையான கோவிந்தபாடி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஒகேனக்கல் ஒட்டியுள்ள வனபகுதிகளில் யானைகள் அட்டகாசம் செய்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. பயிர் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    சேலம் இரும்பாலை அமைப்பதற்கு 4 ஆயிரம் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு வேலை வழங்கப்படும் என கூறி விட்டு குறைந்த நபர்களுக்கு மட்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அது உருக்காலையாக மாற்றப்பட்டுள்ளது.

    இந்த உருக்காலையை தனியாருக்கு தாரை வார்ப்பதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இது சம்பந்தமாக பா.ம.க. சார்பில் விரைவில் நூதன போராட்டம் எனது தலைமையில் நடத்தப்படும்.

    நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பா.ம.க. நிலைப்பாடு குறித்து நிறுவனர் டாக்டர் ராமதாசிடம் எடுத்துக்கூறி இருக்கிறோம்.

    அதன் பின்னர் தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×