search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்காமல் தேர்தலை நடத்துவதா?: ராமதாஸ் கண்டனம்
    X

    அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்காமல் தேர்தலை நடத்துவதா?: ராமதாஸ் கண்டனம்

    அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்காமல் தேர்தலை நடத்துவதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல்களும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலும் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்திய வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள், மது ஆகியவற்றை வழங்கியதற்காக 3 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பெருமை இந்த இரு தொகுதிகளுக்கே உண்டு.

    * இரு தொகுதிகளிலும் நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை, ஓட்டுக்கு பணம் தரப்பட்டது தான் சீரழித்தது. குறிப்பாக அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ஆகிய இருவருமே பணபலம் மிக்கவராக இருப்பதால் அத்தொகுதியில் ஆணையத்தின் கண்காணிப்பையும் மீறி பணம் விளையாடியது.

    மேற்கூறிய குற்றச்சாற்றுகள் அனைத்தையும் கடந்த 27.05.2016 அன்று வெளியிட்ட அறிவிக்கையில் தேர்தல் ஆணையமே கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த இரு தொகுதிகளிலும் தற்காலிகமாக தேர்தலை ஒத்திவைப்பதால், களச்சூழலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும், காலப்போக்கில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்ட பிறகு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஆணையம் கூறியிருந்தது.

    இத்தகைய நிலையில், இப்போது இரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான சூழல் நிலவுகிறது என்ற முடிவுக்கு ஆணையம் எந்த அடிப்படையில் வந்தது? என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும்.

    திருப்பரங்குன்றத்திலும் பணத்தை முதலீடு செய்து வாக்குகளை அறுவடை செய்ய அக்கட்சிகள் தயாராக உள்ளன. 3 தொகுதி தேர்தல் நியாயமாக நடத்த ஒத்துழைப்போம்; ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என்று தேர்தல் ஆணையத்திடமோ அல்லது இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வரும் சென்னை உயர்நீதிமன்றத்திலோ இரு கட்சிகளும் வாக்குறுதி அளிக்கவில்லை.

    இத்தகைய சூழலில் இந்த தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்கும் என நம்புவது மூடத்தனமே!

    வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அரவக்குறிச்சி தொகுதியில் 58 வழக்குகளும், தஞ்சாவூரில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

    இவற்றுக்கெல்லாம் முடிவு ஏற்படாத நிலையில், இரு தொகுதிகளுக்கும் தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்திருப்பது இன்னொரு ஜனநாயக படுகொலை நடப்பதற்கும், மேலும் ஒரு முறை பணநாயகம் வெற்றி பெறவும் தான் வழிவகுக்கும்.

    ஒருவேளை இந்த தேர்தல்களை நியாயமாக நடத்த வேண்டும் என்பது தான் தேர்தல் ஆணையத்தின் உண்மையான நோக்கமாக இருக்குமானால், அதை உறுதி செய்வதற்காக...

    1) தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

    2) இரு தொகுதிகளிலும் 10 வாக்குச்சாவடிக்கு ஒரு தேர்தல் பார்வையாளரையும், ஒரு கம்பெனி மத்திய துணை இராணுவப் படையையும் 26-ந்தேதி முதல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    3) தஞ்சாவூர், கரூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களை தேர்தல் அணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தலைமை தேர்தல் அதிகாரியாக வெளிமாநிலத்தவரை நியமிக்க வேண்டும்.

    4) வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் ஒத்தி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்க வேண்டும்.

    இவை சட்டப்படியோ, நடை முறைப்படியோ சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் கூறினால், இவற்றை சாத்தியமாக்குவதற்கான தேர்தல் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதுவரை தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தல்களை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
    Next Story
    ×