search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்க கூடாது: பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம்
    X

    சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்க கூடாது: பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம்

    சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்க கூடாது என பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உருக்குதுறை மந்திரி சவுத்ரி பிரேந்தர்சிங் ஆகியோருக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அறிஞர்அண்ணா தமிழ் நாடு முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சேலம் உருக்கு ஆலை திட்டம், மற்றும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற கோரி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க 23.7.1967 அன்று தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு தினம் கடை பிடிக்கப்பட்டது. தமிழக மக்களின் நீண்ட நாள் கனவு திட்டங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்தது.

    நான் முதன் முறையாக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற போது 21.3.1970 அன்று மறைந்த பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது ஐந்தாண்டு திட்டத்தில் சேலம் உருக்காலை திட்டத்தை தமிழ்நாட்டுக்கு வழங்கி ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினேன்.

    அதை ஏற்று இந்திரா காந்தி 17.4.1970 அன்று ஐந்தாண்டு திட்டத்தில் சேலம் உருக்காலை திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என பாராளுமன்றத்தில் அறிவித்தார். 16.9.1970 அன்று எனது தலைமையில் அத்திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    தொடக்கத்தில் உருட்டாலை ஆக தொடங்கப்பட்டு படிப்படியாக பல கட்டமாக வளர்ச்சி அடைந்து பிரபலமான உருக்காலை ஆக இதுமாறியது.

    அதில் நேரடியாக 2500 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதன் மூலம் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

    சேலம் உருக்காலை வேகமாக வளர்ச்சி அடைந்து உற்பத்தி நடைபெறும் போது மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு அதை தனியார் மயமாக்குவதை அறிந்து திடுக்கிட்டுள்ளனர்.

    இந்த ஆலை தொடங்கப்பட்டதில் இருந்து லாபத்தில் இயங்கி வருகிறது. ரூ.100 கோடி லாபத்தை ஈட்டி வரும் இந்த நேரத்தில் அதை மத்திய அரசு தனியார் மயமாக்க முயற்சி செய்வது மிகப்பெரிய இழப்பாகும்.

    இந்த ஆலையை தனியாருக்கு வழங்குவதற்கு பதிலாக சேலத்தில் மின் உற்பத்தி நிலையம் மற்றும் ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைப்பதன் மூலம் இந்த அலையை பலப்படுத்த முடியும்.

    தமிழக மக்கள் சேலம் இரும்பாலையுடன் உணர்வு பூர்வமாக இணைக்கப்பட்ட நிலையில் அதை தனியார் மயமாக்கும் எந்த முயற்சியும் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வெகுஜன கருத்து வேறு பாடுகளையும் ஏற்படுத்தும்.

    எனவே தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பாலையை தாங்கள் தலையிட்டு காப்பாற்ற வேண்டும்.

    உரிய நேரத்தில் நீங்கள் தலையிட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தமிழகத்தின் புகழ் பெற்ற அடையாள சின்னமாக திகழும் சேலம் இரும்பாலையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

    கடிதத்தின் நகல் மத்திய எக்கு துறை மந்திரி சவுத்திரி பிரேந்திர சிங்குக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×