search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியில் 2.6 டி.எம்.சி. தண்ணீர் திறப்பதை ஏற்க முடியாது: வைகோ அறிக்கை
    X

    காவிரியில் 2.6 டி.எம்.சி. தண்ணீர் திறப்பதை ஏற்க முடியாது: வைகோ அறிக்கை

    தமிழகத்தின் கோரிக்கையான 64 டி.எம்.சி. நீரை திறக்க வேண்டும் என்பதை அலட்சியப்படுத்திவிட்டு, கர்நாடக மாநிலம் காவிரியில் வெறும் 2.6 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு அறிவுறுத்தி இருப்பதை ஏற்க முடியாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 5 அன்று பிறப்பித்த உத்தரவில் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை பத்து நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. செப்டம்பர் 10 ஆம் தேதி கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியது.

    இடைக்கால மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி, டெல்லியில் நடந்த காவிரி மேற்பார்வைக்குழுக் கூட்டத்தில் தமிழகம் தாக்கல் செய்த மனுவில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கர்நாடக அரசு 134 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவுபடி 13 டி.எம்.சி. நீரை திறந்து விட்டாலும், சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது. எனவே, காவிரியில் தற்காலிகமாக 64 டி.எம்.சி. நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

    19 ஆம் தேதி மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர் தலைமையில் டெல்லியில் கூடிய காவிரி மேற்பார்வைக்குழு, தமிழகத்தின் கோரிக்கையான 64 டி.எம்.சி. நீரை திறக்க வேண்டும் என்பதை அலட்சியப்படுத்திவிட்டு, கர்நாடக மாநிலம் காவிரியில் வெறும் 2.6 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு அறிவுறுத்தி இருப்பது அநீதியானது.

    உச்ச நீதிமன்றம் சுமார் 10.4 டி.எம்.சி. திறந்தவிட உத்தரவிட்டுள்ள நிலையில், காவிரி மேற்பார்வைக்குழு வெறும் 2.6 டி.எம்.சி நீரை அளிக்கக் கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது.

    காவிரி மேற்பார்வைக் குழு என்பது, அதிகாரம் ஏதுமற்ற சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாத ‘பல் இல்லாத’ ஒரு அமைப்பு ஆகும். காவிரி நீர் பங்கீடு குறித்து சட்டபூர்வ அங்கீகாரம் உள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழுவை காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி அமைப்பது மட்டும்தான் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வழிவகுக்கும்.

    எனவே, தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டி, பிரதமரை நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழுவை உடனடியாக அமைத்திட அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×