search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் விருப்ப மனு தொடங்கியது
    X

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் விருப்ப மனு தொடங்கியது

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை மறுதினம் கடைசி நாள் ஆகும்.
    சென்னை:

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை மறுதினம் கடைசி நாள் ஆகும்.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அ.தி.மு.க. ஏற்கனவே தொடங்கிவிட்டது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தி.மு.க.வும் அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது.

    மாவட்ட வாரியாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேர்தல் பணி மேற்பார்வையாளர்கள் 29 பேரை நேற்று முன்தினம் தி.மு.க. தலைமை நியமித்தது. இந்த நிலையில் தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் நேற்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

    மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.10 ஆயிரம், நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.4 ஆயிரம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இதேபோல ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட கட்டணத்தில் இருந்து பாதி தொகை மட்டும் செலுத்தவேண்டும். மேலும் விண்ணப்ப படிவத்தை ரூ.10 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    சைதாப்பேட்டை, ஆலந்தூர், விருகம்பாக்கம், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்களுக்கு சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதேபோல கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், எழும்பூர், திரு.வி.க.நகர், துறைமுகம் தொகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்களுக்கு வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலையில் உள்ள டி.கே.ஏ.திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ.வும், சென்னை மேற்கு மாவட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்களுக்கு தியாகராயநகர் மேட்லி சாலையில் உள்ள மனமகிழ் மன்றத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

    இதனை தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதேபோல சிலர் விண்ணப்ப படிவத்தை உடனடியாகவும் பூர்த்தி செய்து வழங்கினார் கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வருகிற 22-ந்தேதிக்குள் (வியாழக்கிழமை) அந்தந்த மாவட்ட அலுவலகங்களிலும், தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×