search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வில் சேர 50 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திடுக்கிடும் தகவல்
    X

    அ.தி.மு.க.வில் சேர 50 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திடுக்கிடும் தகவல்

    அ.தி.மு.க.விற்கு தாவ 50 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் நகர அ.தி.மு.க. சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேரவை செயலாளர் என்.எம்.ரமணா தலைமையில் நடைபெற்றது.

    இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சிவகாசி, திருத்தங்கல் உள்பட விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் தாமிரபரணி தண்ணீரை கொண்டு வந்தது முதல்வர் ஜெயலலிதாதான். சிவகாசி, திருத்தங்கல்லிற்கு மேலும் சில புதிய குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார்.

    சிவகாசிக்கு ரூ.135 கோடி மதிப்பீட்டிலும், திருத்தங்கல்லிற்கு ரூ.68கோடி மதிப்பீட்டிலும் ராஜபாளையத்திற்கு ரூ.150 கோடி மதிப்பீட்டிலும் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கியுள்ளார்.

    சிவகாசிக்கு புதிய அரசு கலை கல்லூரியை கொண்டு வந்துள்ளோம். அரசு மருத்துவமனையை ஹைடெக் மருத்துவமனையாக தரம் உயர்த்திக் கொடுத்துள்ளோம். சிவகாசிக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுக் கொடுத்துள்ளோம். சிவகாசி பஸ் நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பட்டாசு ஆலைகள் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் புதிய சாலைகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். பட்டாசு தொழிலார்களுக்கு புதிய பட்டாசு பயிற்சி மையம் அமைத்துக் கொடுத்துள்ளோம். புதிய பட்டாசு பயிற்சி மையம் மூலம் பட்டாசு வெடி விபத்துகள் குறைந்துள்ளது.

    இத்தனை திட்டங்களை செய்து முடித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரட்டை சின்னத்தில் ஓட்டுப்போட மக்கள் தயாராக உள்ளனர். திருத்தங்கல், சிவகாசி உட்பட மாவட்டத்தில் உள்ள எந்த பதவிகளிலும் தி.மு.க. ஜெயிக்கக்கூடாது. அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் அ.தி.மு.க.தான் மாபெரும் வெற்றிபெறும். காவிரி பிரச்சினையில் முதல்வர் நடவடிக்கையை தி.மு.க.வை தவிர அனைத்து கட்சிகளும் பாராட்டி வருகின்றன.

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நொந்து போய் உள்ளனர். முதல்வர் அழைத்தால் அ.தி.மு.க.விற்கு வர 50 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர்.

    உள்ளாட்சியில் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர்ந்திட அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×