search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரசில் சேரும் பேச்சுக்கே இடமில்லை: ஜி.கே.வாசன் பேட்டி
    X

    காங்கிரசில் சேரும் பேச்சுக்கே இடமில்லை: ஜி.கே.வாசன் பேட்டி

    நாங்கள் காங்கிரசை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டோம் ‘காங்கிரசில் மீண்டும் இணையும் பேச்சுக்கே இடமில்லை’ என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்
    சென்னை:

    காங்கிரசில் இருந்து வெளியேறி த.மா.காவை ஜி.கே.வாசன் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கினார். அந்த கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக தேர்தலை சந்தித்தது.

    தேர்தலில் வெற்றி பெற முடியாததால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலகினார்கள்.

    இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த ஜி.கே.வாசன் அங்கு 3 நாட்கள் முகாமிட்டு காங்கிரசில் மீண்டும் சேருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும், விரைவில் மீண்டும் காங்கிரசில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியானது.

    முக்கியமாக உடல் நலமில்லாத சோனியாகாந்தி நலம் பெற வேண்டி வாழ்த்து கடிதம் அனுப்பி இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இந்த தகவல்களை த.மா.கா வட்டாரங்கள் மறுத்தன.

    இதற்கிடையில் திருவாரூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாசன் ‘காங்கிரசில் மீண்டும் இணையும் பேச்சுக்கே இடமில்லை’ என்று கூறி அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது பற்றி அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றால் தமிழ்மாநில காங்கிரஸ்தான் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பற்றி தேர்தல் அறிவிப்புக்கு பிறகுதான் முடிவு செய்யப்படும்.

    டெல்லி, மும்பை என்று பல மாநிலங்களுக்கு செல்வேன். அதற்காக கற்பனையான வதந்திகளை பரப்புவது ஏற்கத்தக்கதல்ல. நாங்கள் காங்கிரசை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டோம். பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் பயணித்து கொண்டிருக்கிறோம். உயிரோட்டமுள்ள முன்னணி இயக்கமாக த.மா.கா உருவாகி கொண்டிருக்கிறது. மீண்டும் காங்கிரசில் இணைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×