search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்டக்கூடாது: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்டக்கூடாது: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    தமிழகத்தின் நீராதாரம் காக்கப்பட வேண்டும். காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்டக்கூடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் பாரம்பரியமான விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதில் 2-வது கருத்து யாருக்கும் இருக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் அது நிறுத்தப்பட்டது. மீண்டும் அதைக்கொண்டு வருவதற்காக 2 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

    இந்த ஜல்லிக்கட்டை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம் இருப்பதால் கருத்துகள் வேறு, வேறாக வர முடியும்.

    ஜல்லிக்கட்டை விரும்புபவர்களும் இருக்க முடியும், ஜல்லிக்கட்டுக்கு பயந்து போகிறவர்களும் இருக்க முடியும். ஜல்லிக்கட்டு களத்தில் இறங்கி விளையாடுபவர்கள் சிலபேர்தான் இருக்க முடியும். மற்றவர்கள் எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். இது கிரிக்கெட் விளையாட்டு உள்பட எல்லா விளையாட்டுக்கும் பொருந்தும்.

    மத்திய அமைச்சரவையில் பிரதமர் நரேந்திரமோடி அரசாங்கத்தில் 75 மந்திரிகள் இருக்கிறார்கள். அதில் ஒரு மந்திரி சொன்ன விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. தமிழகத்தில் எத்தனை பேர் எத்தனை கருத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். பலபேர் வெளியே பேசமுடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

    அதற்காக மத்திய மந்திரி மேனகா காந்தியை எதிர்ப்பதாக இல்லை. அவருக்கும் சில கருத்துகள் இருக்க முடியும். நமது தேவை ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அதற்கு என்ன தேவையோ? அதை நாம் செய்கிறோம். பிரதமர் நரேந்திரமோடியும் ஜல்லிக்கட்டு விளையாட்டை கொண்டு வர வேண்டும் என்று தான் விரும்புகிறார்.

    ஜல்லிக்கட்டில் காளைகள் கொடுமைப்படுத்தப்படவில்லை. இந்த விளையாட்டில் காளைகள் தான் இளைஞர்களை கொடுமைப்படுத்துகிறது. அதை பொறுத்துக் கொண்டுதான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டு என்றால் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்.

    நான் திரும்பத்திரும்ப கிரிக்கெட்டை சொல்லக்காரணம், இந்தியா முழுவதும் அதற்கு பெரிய விழா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் கிரிக்கெட்டை நிறுத்தட்டும், அதன் பின்னர் ஜல்லிக்கட்டை நிறுத்தட்டும்.

    காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்டக்கூடாது என்பது நம்முடைய நிலைப்பாடு. எந்தக்காரணத்தைக் கொண்டும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தின் நீராதாரம் காக்கப்பட வேண்டும். அது காவிரி மட்டுமல்ல, முல்லைப்பெரியாறாக இருந்தாலும் சரி, நெய்யாறு இடதுகரை சானலாக இருந்தாலும் சரி, பாலாறாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் நமது நீராதாரம் காக்கப்பட வேண்டும்.

    கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி உறுதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அங்கு இருக்கக்கூடிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதை இன்னும் முடுக்கி விட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழக சட்டசபையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறவில்லை.

    இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

    முன்னதாக சுதந்திரதினத்தையொட்டி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இறச்சகுளத்தில் நடந்த இரு சக்கர வாகன பேரணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இரு சக்கர வாகனத்தை இயக்கியபடி சென்றார்.
    Next Story
    ×