என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் அ.தி.மு.க - தி.மு.க.வை வீழ்த்தும் வரை ஓயமாட்டோம்: ராமதாஸ் பேச்சு
    X

    தமிழகத்தில் அ.தி.மு.க - தி.மு.க.வை வீழ்த்தும் வரை ஓயமாட்டோம்: ராமதாஸ் பேச்சு

    தமிழகத்தில் அ.தி.மு.க - தி.மு.க.வை வீழ்த்தும் வரை ஓயமாட்டோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் வணிகர் வீதியில் பாமக சார்பில் சட்டசபை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார் அவர் பேசியதாவது:-

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பணநாயக முறைப்படியே நடைபெற்றது. எனினும் எங்களுக்கு 25 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். பா.ம.க. 5.3 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்தே போட்டியிடும்.

    தமிழகத்தில் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியின் ஆட்சியை அகற்ற அண்ணாதுரை கட்சியை நடத்தினார். ஆனால் இன்று பா.ம.க.விற்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளை வீழ்த்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. அது நிறைவேறும் வரை பா.ம.க. ஓயாது.

    அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டினை அவர் வழி நடப்பதாக செல்லும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கடைபிடிக்க வில்லை. மாறாக பா.ம.க. தான் கடைபிடிக்கிறது.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே நாங்கள் ஜாதி கட்சி அல்ல. எங்களை அப்படி கூறாதீர்கள். வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு எங்கள் பலத்தை நிரூபிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும் போது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவினை தடுக்க தேர்தல் கமி‌ஷன் தவறிவிட்டது.

    எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து அவர்களின் கூறைகளை கேட்டு அதைதான் நாங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டோம். கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வரும் அ.தி.மு.க., தி.மு.க. விற்கு மாற்றாக புதிய மாற்றத்தை உருவாக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டோம். இந்தமுறை எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

    ஆனால் அடுத்தமுறை அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை நோக்கி பயணம் தொடரும் என்றார்.

    கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, நிர்வாகிகள் திருகச்சூர் ஆறுமுகம், பொன்.கங்காதரன், மகேஷ் குமார், உமாபதி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×