search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    தாய்-மகள் உறவை பலப்படுத்தும் விஷயங்கள்
    X

    தாய்-மகள் உறவை பலப்படுத்தும் விஷயங்கள்

    • தனது மகளின் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தாயிடம் இருக்கும்.
    • தாய்-மகள் இடையேயான உறவு பந்தம் வலுவானது, உணர்வுப்பூர்வமானது.

    தாய்-மகள் இடையேயான உறவு பந்தம் வலுவானது, உணர்வுப்பூர்வமானது. பெண்கள் தங்கள் முதல் ரோல் மாடலாக தாயைத்தான் கருதுவார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் தாயை பார்த்தே கற்றுக்கொள்வார்கள். அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் தாயின் நடவடிக்கைகளை சார்ந்தே அமைந்திருக்கும். குழந்தை பருவம் முதல் தாயுடன் நெருக்கமாக தொடரும் உறவில், டீன் ஏஜ் பருவம் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தும். மகள் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற உணர்வு தாய்மார்களிடம் எட்டிப்பார்க்கும்.

    டீன் ஏஜ் பருவத்தில்தான் தாயிடம் மகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கும். மகள் தன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டாலோ, தங்கள் எதிர்பார்ப்புபடி நடந்து கொள்ளாவிட்டாலோ மனதொடிந்து போவார்கள். மகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிப்பார்கள். அவர்களது நோக்கம் மகள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அதை மகள் புரிந்துகொள்வதில்தான் பிரச்சினைகள் உருவாகும். மகளின் செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகளை சுட்டுக்காட்டும்போது அதை தவறுதலாக புரிந்து கொள்ளலாம். அதனை தவிர்ப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    பொதுவாகவே டீன் ஏஜ் பருவத்தில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விடுவார்கள். தங்களை கவர்ந்த ஆடை, அணிகலன்களை தேர்ந்தெடுத்து தங்கள் அழகை மெருகேற்ற விரும்புவார்கள். அழகு சாதனப் பொருட்களையும் அதிகம் பயன்படுத்த விரும்புவார்கள். அதனை கையாள்வதில் இருக்கும் சிரமங்களையும், பாதிப்புகளையும் தாயார் பக்குவமாக புரியவைக்க வேண்டும். அதைவிடுத்து மகளின் அழகை சுட்டிக்காட்டி, இந்த அழகுசாதனப்பொருட்களெல்லாம் உனக்கு பொருத்தமாக இருக்காது என்று கூறி மகளின் அழகை குறை சொல்லக்கூடாது. பணத்தை வீண் விரயம் செய்வதாகவும் கடிந்து கொள்ளக்கூடாது. மகளின் அழகுக்கு எவையெல்லாம் பொருத்தமாக இருக்கும் என்பதை பக்குவமாக எடுத்துக்கூற வேண்டும்.

    மகளின் செயல்பாடுகளில் தவறு இருக்கலாம். அதனை மகள் மனம் நோகாத படிதான் புரியவைக்க வேண்டும். குடும்பத்தினர் முன்போ, மற்றவர்கள் முன்போ, பொது இடங்களிலோ திட்டக்கூடாது. அப்படி பிறர் முன்பு திட்டுவது மகளுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிடும். தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்திவிடும். தாய்-மகள் இடையேயான உறவில் இடைவெளி உண்டாகுவதற்கும் காரணமாகிவிடும்.

    மகளின் படிப்பு விஷயத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. குறிப்பாக 'உன் மகளுடன் ஒப்பிடும்போது என் மகள் படிப்பில் ஆர்வம் காட்டு வதில்லை' என்ற ரீதியில் பேசக்கூடாது. மகளின் செயல்பாடுகளை பற்றி மற்றவர்களிடம் குறை கூறுவதும் நல்லதல்ல. மகளின் குறைகளை அவரிடமே நேரில் சுட்டிக்காட்டி திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். அப்போது கடுமை காட்டுவதும் தவறானது.

    அன்பு, தியாகம், பணிவு, இரக்கம் உள்ளிட்ட அனைத்து குணாதிசயங்களையும் கொண்டவராக மகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தாய்க்கு இருக்கிறது. அதேவேளையில் சூழ்நிலைக்கு ஏற்ப குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பக்குவம் கொண்டவராக மகள் விளங்க வேண்டும். எல்லா சூழ்நிலைகளிலும் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து தனக்கு வேண்டியதை இழந்துவிடக் கூடாது.

    தனது மகளின் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தாயிடம் இருக்கும். மகளின் திருமண விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டுவார்கள். அதே எதிர்பார்ப்பும், ஆர்வமும் மகளிடமும் வெளிப்படும் என்பதை தாயார் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தனது திருமணத்தில் என்னென்ன சம்பிரதாயங்கள் இடம்பெற வேண்டும், அலங்கார வேலைப் பாடுகள் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்பது போன்ற மகளின் விருப்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை மகளுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை என்றால், அதற்கான சூழல் உருவாகும்வரை அமைதியாக இருங்கள். இதைவிட்டால் வேறு நல்ல மாப்பிளை கிடைக்காது என்று மகளுக்கு நெருக்கடி கொடுக்காதீர்கள்.

    Next Story
    ×