search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்களை தாக்கும் ஹைப்போ தைராய்டும்... சித்த மருத்துவமும்...
    X

    பெண்களை தாக்கும் ஹைப்போ தைராய்டும்... சித்த மருத்துவமும்...

    • அதிக மாதவிடாய் தொந்தரவுகளை ஏற்படுத்துபவை தைராய்டு சுரப்பி கோளாறுகள்.
    • சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறுக்கு நல்ல தீர்வு எட்ட முடியும்.

    சினைப்பை நீர்கட்டிக்கு அடுத்தாற்போல், பெண்களுக்கு அதிக மாதவிடாய் தொந்தரவுகளை ஏற்படுத்துபவை தைராய்டு சுரப்பி கோளாறுகள். மாதவிடாய் சரிவர ஆகவில்லை என்று மருத்துவரை அணுகும் பெண்களுக்கு அதிர்ச்சி தர காத்திருப்பது தைராய்டு சுரப்பி கோளாறுகளும் தான். டாக்டர் எனக்கு மாதவிடாய் சரிவர நிகழவில்லை, ஸ்கேன் பண்ணி பாத்தாச்சு, நீர்க்கட்டி தொந்தரவும் இல்லை என்று கூறும் போது மருத்துவர் அடுத்ததாக தைராய்டு பரிசோதனையை ஆய்வு செய்ய விரும்புவது வழக்கமான ஒன்று.

    உடல் எடை கூடிக்கொண்டே செல்கிறதா? அல்லது குறைகிறதா? உடல் அசதியாக உள்ளதா? மலச்சிக்கல் உள்ளதா ? அல்லது கழிச்சல் உள்ளதா?மாதவிடாய் சுழற்சி சரிவர நிகழ்கிறதா? மாதவிடாயின் போது வலி உள்ளதா? அதிக உதிரப்போக்கு உள்ளதா? வறண்ட தோலா? உடையக்கூடிய நகங்களா? கருச்சிதைவா? குழந்தை பேறின்மையா ? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அணுக இருப்பது இந்த தைராய்டு பரிசோதனையைத் தான். அவ்வாறு செய்யப்படும் தைராய்டு பரிசோதனையில் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படுவது குறைவீதனம் எனப்படும் தைராய்டு சுரப்பு குறைந்த நிலை (ஹைப்போதைராய்டு) தான். ஆய்வுக் கூட பரிசோதனையில் கண்டறியப்படும் டி.எஸ்.எச் (TSH) அளவைப்பொறுத்து இந்நோயின் நிலையை கண்டறியலாம்.

    அதிகரிக்கும் உடல் எடையும், வளர்ச்சிதை மாற்ற குறைப்பாட்டால் உடல் அசதியும், மாதாந்திர பூப்பு சுழற்சி மாறுபடுதலும் இந்த ஹைப்போதைராய்டு பிரச்சினை உள்ள மகளிர்க்கு அதிகம். ஏன் தைராய்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று கவனித்தால், கழுத்தின் முன் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பியில் சுரக்கும் 'தைராக்சின்' எனும் ஒற்றை ஹார்மோன் உடலில் உள்ள மற்ற அனைத்து ஹார்மோன்களோடும் தொடர்புடையதே இதற்கு காரணம்.

    அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த தைராய்டு சுரப்பி கோளாறுகள் இன்று வீட்டுக்கு வீடு வாசப்படியைப் போல மாறிவிட்டதற்கு காரணம் மாறிப்போன வாழ்வியல் முறையும் உணவு முறையும் தான். மன அழுத்தம் என்பது பலரும் அறிந்தது. மனதோடு தொடர்புடைய மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது உடலும் தான். இது பல்வேறு உடல் உபாதைகளுக்கு காரணம்.

    சற்று உற்றுநோக்கினால், அதைப்போல் நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இந்த ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் சென்று ஏற்படுத்தும் சேதங்களே இவ்வாறு அதிகமாகும் ஹார்மோன் குறைபாடுகளுக்கு காரணம். இது இயல்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹார்மோன் சுழற்சியை தடுத்து செல்லுக்குள் இருக்கும் டி.என்.ஏ. வரை சென்று தாக்கி சேதாரத்தை ஏற்படுத்தக் கூடியது.

    இந்த 'ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்' தான் இன்றைய பெரும்பாலான நவீன ஆராய்ச்சியாளர்களின் பரிசோதனைப் பொருள். இதனை குறைப்பதும், தடுப்பதும் தான் பல்வேறு நோய் நிலைகளை தடுப்பதற்கு ஒரே ஆயுதம்.

    'பாட்டி எனக்கு தைராய்டு இருக்குனு சொல்லிட்டாங்க, நான் காலத்துக்கும் மருந்து சாப்பிட்டே ஆகணுமாம்' என்று வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும் இன்றைய இளம் தலைமுறைப்பெண்கள் சித்த மருத்துவத்தை அணுக வேண்டியது அவசியம். ஏனெனில் நோயின் சப் கிளினிக்கல் ஹைப்போ தைராய்டு என்று கூறப்படும் ஆரம்ப நிலையிலே சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறுக்கு நல்ல தீர்வு எட்ட முடியும்.

    தைராய்டு சுரப்பி குறைந்த நிலையில் பயன்படும் சித்த மருத்துவ மூலிகைகளில் முக்கிய இடத்தை பிடிப்பது மந்தாரை பட்டையும், அமுக்கரா கிழங்கும், குங்கிலியமும் தான்.

    இந்தியன் ஜின்செங் என்று அழைக்கப்படும் அமுக்கரா கிழங்கு பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தினசரி அமுக்கரா சூரணம் என்ற சித்த மருந்தை எடுத்துக்கொள்ள தைராய்டு சுரப்பி கோளாறு மட்டுமின்றி, பல்வேறு ஹார்மோன் சுரப்பிகளை சீராக்கும் தன்மை உடையது. பெண்களின் மலட்டு நோய்க்கு பல்வேறு ஆண்டுகளாக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. வித்தாபெரின்-எ என்ற வேதிப்பொருள் சினைப்பை நீர்கட்டிகளை கரைக்கும் தன்மையும், மாதவிடாய் சீராக்கும் தன்மையும், தைராய்டு சுரப்பியை தூண்டி இயற்கையாக செயல்பட வைக்கும் தன்மையும் உடையது.

    அடுத்து அதிக பலனை தருவது மந்தாரை பட்டை. மந்தாரை இலை எனும் மகத்தான விருந்தளிக்கும் இலையை இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த இலையில் அறுசுவை விருந்து உண்டால், அதன் சுவைக்கும் மணத்திற்கும் நிகரில்லை என்றே சொல்லலாம். நோய்க்கு ஆதாரமாகும் பிளாஸ்டிக் தட்டுக்களும், பேப்பர் பிளேட்களும் பழகிவிட்ட இக்காலத்தில் மருத்துவ குணமிக்க பல மூலிகைகள் மறந்தே போய்விட்டன. இதனால் மறந்துபோன பல நோய்களும், மீண்டெழுந்து நம் ஆரோக்கியத்தை சிதைக்கின்றன.

    அந்த வகையில், மந்தாரை மரத்தின் பட்டையானது தைராய்டு சுரப்பியின் வீக்கத்தை குறைப்பதோடு, அதைத்தூண்டி இயற்கையாக செயல்பட வைக்கும் தன்மை உடையது. பல ஆண்டுகளாக தைராய்டு சுரப்பி குறைவுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மூலிகை எலிகளில் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பாரம்பரிய மருத்துவம் மீதான நம்பிக்கையை உலக அரங்கில் அதிகரிக்கிறது. இதில் உள்ள மூன்று முக்கிய பிளவனாய்டு வேதிப்பொருட்கள் இதன் மருத்துவ தன்மைக்கு காரணமாகின்றன.

    குங்கிலியம் எனும் மற்றொரு மூலிகைப்பிசின் தைராய்டு கோளாறுக்கு நல்ல பலன் தருவதாக உள்ளது. காலம்காலமாக வீட்டில் சாம்பிராணி புகைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் குங்கிலியம் காற்றில் உள்ள கிருமிகளை மட்டுமல்லாது, நம் உடலில் உள்ள கிருமிகளையும் அழித்து, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். மேலும் தைராய்டு சுரப்பியை இயற்கையாக தூண்டி செயல்பட வைக்கும் தன்மையுடையது குறிப்பிடத்தக்கது.

    நம் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது, ஹைப்போ தைராய்டு நிலையைத் தூண்டும் தன்மையுடையன என்று ஆய்வுகள் கூறுகின்றது. ஆக, தாதுஉப்புக்கள் மற்றும் வைட்டமின்களின் உட்கொள்ளலை அதிகரிக்க செய்வது, அவைகளை அடிப்படையாக கொண்ட கீரைகளையும், பழங்களையும், பாரம்பரிய உணவுகளையும் உணவில் சேர்ப்பதால் தைராய்டு குறைபாடு மட்டுமின்றி பல்வேறு ஹார்மோன் குறைபாடுகளை போக்க உதவும்.

    பரம்பரை வழியாக வரும் தைராய்டு குறைவு நோயினை கண்டு அஞ்சி வருந்தும் மகளிர் தினசரி மஞ்சளை பாலில் கலந்து எடுத்துக்கொள்வதுடன் சர்வாங்காசனம்,தியானம் ஆகியவற்றை பழகுதல் மூலம் ஹைப்போதைராய்டு வராமல் தடுக்க முடியும். பல்வேறு உடல் உறுப்புகளையும், எண்டோகிரைன் சுரப்பிகளையும் இயற்கையாக தூண்டும் மருத்துவ குணமிக்க மஞ்சளை அடிக்கடி உணவில் பயன்படுத்துவது பெண்களுக்கு நல்ல பயன் தரும். காய்டர் என்று சொல்லப்படும் தைராய்டு சுரப்பியின் வீக்கத்திலும், இது வீக்கத்தை குறைப்பதில் நல்ல பயனளிக்கும். மஞ்சளில் உள்ள 'குர்குமின்' என்ற வேதிப்பொருள் உலகமே வியக்கும் வண்ணம் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகிறது.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×