search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அமாவாசையை பவுர்ணமியாக்கிய அபிராமி அம்மன்
    X

    அமாவாசையை பவுர்ணமியாக்கிய அபிராமி அம்மன்

    • சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனை நினைத்து வழிபட தொடங்கினார்.
    • திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தின் பட்டராக இருந்தவர், சுப்பிரமணியன்.

    திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தின் பட்டராக இருந்தவர், சுப்பிரமணியன். இவர் தை அமாவாசை நாளில் கோவிலில் அபிராமி அம்மனை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது தஞ்சையை தலைநகராகக்கொண்டு ஆண்ட மராட்டிய மன்னர், திருக்கடையூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அங்கிருந்த பலரும் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

    ஆனால் அபிராமி அம்மன் சன்னதியில் இருந்த சுப்பிரமணிய பட்டர் மன்னரை கவனிக்காமல் தன்னை மறந்து அபிராமி அம்மனை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இதைக்கண்ட மன்னர், சுப்பிரமணிய பட்டர் தியானத்தில் இருந்து விழித்ததும், "இன்று என்ன திதி?" என்று கேட்டார். அப்போது சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனின் திருமுகத்தை மனதில் நினைத்தவாறு இன்று "பவுர்ணமி" என்று தவறாக கூறிவிட்டார். இதனால் சினம் கொண்ட மன்னர் இன்று இரவு வானில் முழு நிலவைக் காட்ட வேண்டும். முழு நிலவு தோன்றாவிட்டால் உங்களை(சுப்பிரமணிய பட்டரை) அக்னி குண்டத்தில் ஏற்றிவிடுவேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    மன்னர் அங்கிருந்து அகன்ற பிறகுதான், சுப்பிரமணிய பட்டருக்கு தான் தவறாக அமாவாசை நாளை பவுர்ணமி என கூறியது நினைவுக்கு வந்தது. இதனால் அச்சம் அடைந்த சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனை நினைத்து வழிபட தொடங்கினார். இது ஒரு புறம் இருக்க அபிராமி அம்மன் சன்னதி எதிரே சுப்பிரமணிய பட்டரை அக்னி குண்டத்தில் ஏற்ற ஏற்பாடுகள் தொடங்கியது. எரியும் நெருப்பின்மேல் தொங்கும் உறியில் சுப்பிரமணிய பட்டர் ஏற்றப்பட்டார். சுப்பிரமணிய பட்டரும் அபிராமி அந்தாதி பாடல்களை பாட தொடங்கினார்.

    79-வது பாடலை சுப்பிரமணிய பட்டர் பாட தொடங்கும்போது, அன்னை அபிராமி அம்மன் வானில் காட்சி தந்து, தனது இடது காதில் இருந்த சந்திர தாடங்கத்தினை கழற்றி வானில் வீசினாள். அது பலகோடி நிலவின் ஒளியை அந்த அமாவாசை வானில் வெளியிட்டது. இதனால் அமாவாசை இருள் நீங்கி, வானில் முழு பவுர்ணமி நிலவு தோன்றியது. உறியின் கீழே மூட்டப்பட்டிருந்த நெருப்பு முழுவதும் நறுமண மலர்களாய் மாறியிருந்தன. மன்னா் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும், அபிராமி அம்மனின் அருளையும், சுப்பிரமணிய பட்டரின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர். மேலும் சுப்பிரமணிய பட்டருக்கு 'அபிராமி பட்டர்' என்ற பட்டத்தை மன்னர் சூட்டினார். தை அமாவாசை தினத்தன்று, ஆண்டுதோறும் திருக்கடையூர் அபிராமி அம்மன் சன்னதி முன்பாக அபிராமி அந்தாதி பாடப்படுவதுடன், பவுர்ணமி தோன்றும் நிகழ்வும் நடத்திக் காட்டப்படுகிறது.

    Next Story
    ×