search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார்: திட்டை-ஆலங்குடி கோவில்களில் இன்று குருபெயர்ச்சி விழா
    X

    குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார்: திட்டை-ஆலங்குடி கோவில்களில் இன்று குருபெயர்ச்சி விழா

    • குருபெயர்ச்சி விழாவையொட்டி திட்டை மற்றும் ஆலங்குடி கோவில்களில் இன்று காலை முதலே பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர்.
    • உள்ளூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் மற்றும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்களில் இன்று இரவு குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

    தஞ்சாவூர் அருகே உள்ள திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில் குரு பரிகார தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு இந்த கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறும்.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) இரவு 11.21 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார்.

    குருபெயர்ச்சி விழாவையொட்டி இன்று மாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குரு பெயர்ச்சி அடைந்ததும் குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். அதிகாலை 2 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    அப்போது இதில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    குரு பெயர்ச்சி அடைந்த பிறகு திட்டை கோவிலில் லட்சார்ச்சனை மே 1-ம் தேதி மட்டும் நடைபெறவுள்ளது. இதற்காக சிறப்பு கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படுகிறது. அதே போல் குருபெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமம் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

    இதேப்போல் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆலங்குடியில் அமைந்துள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் (குருபரிகார தலம்) இன்று இரவு 11.21 மணிக்கு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

    அப்போது இதில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவையொட்டி குருபகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா முடிவடைந்தது. இதையொட்டி கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் தட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

    வருகிற 27-ந்தேதி முதல் அடுத்தமாதம் (மே) 1-ந்தேதி வரை 2-ம் கட்ட லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

    குருபெயர்ச்சி விழாவையொட்டி திட்டை மற்றும் ஆலங்குடி கோவில்களில் இன்று காலை முதலே பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். உள்ளூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே கட்டைகள் அமைக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    2 மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குருபெயர்ச்சி விழாவுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக மேலாண் இயக்குனர் எஸ்.எஸ். ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஆலங்குடி, திட்டை மற்றும் சூரியனார் கோவில் ஆகிய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று மற்றும் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) வரை ஆலங்குடிக்கு கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதே போல் தஞ்சாவூரில் இருந்து திட்டை கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவிலுக்கும் சிறப்பு பஸ்கள் இயங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குருபெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் ?

    திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று இரவு 11.21 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார்.

    குருபகவான் பெயர்ச்சி அடைந்த பிறகு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று திட்டை கோவில் சிவாச்சாரியார் சாமிநாதன் கூறிய தகவல்கள் வருமாறு :-

    இன்று இரவு 11.21 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார். அதன் பிறகு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். தொழில் விருத்தியாகும். இதுவரை தடைப்பட்டு போன திருமணம் கைக்கூடும். பதவி உயர்வு கிடைக்கும். வேலை இல்லாமல் அவதிப்படுவர்களுக்கு விரைவிலே நிரந்தர வேலை கிடைக்கும். தொட்டது எல்லாம் துலங்கும். மேலும் குருபெயர்ச்சி அடைந்தவுடன் மேற்கூறிய ராசிக்காரர்கள் முல்லைப்பூக்களை கொண்டு அர்ச்சனை செய்தால் அவர்களது தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×