search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள்-ரங்கமன்னார். கொடியேற்ற விழாவில் பங்கேற்ற பக்தர்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • ஆகஸ்டு 1-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
    • சர்வ அலங்காரத்தில் ஆண்டாள்-ரங்க மன்னார் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று, ஆண்டாள் பிறந்த தினத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் வளாகத்திலேயே தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    விழா நிகழ்ச்சிகள் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி இன்று காலை ஆண்டாள்-ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் ஆண்டாள்-ரங்க மன்னார் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அதிகாலையில் கொடி பட்டம் மாடவீதி. 4 ரத வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது.

    பின்னர் கொடி மரத்தின் அருகே கொடி பட்டத்திற்கும் சிறப்பு பூஜை நடந்தது. ஆண்டாள் கோவில் அர்ச்சகர் பாலாஜி கொடியேற்றினார். இன்று முதல் 31-ந் தேதி வரை தினமும் ஆண்டாள்-ரங்க மன்னார் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    தேரோட்ட நிகழ்ச்சிகள் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியதால் ஆண்டாள் கோவில் அமைந்துள்ள பகுதி மற்றும் முக்கிய பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது. கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், ஆணையாளர் செல்லத்துரை, நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×