search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • திருவிழா நாளை தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.
    • 14-ந் தேதி பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற உள்ளது.

    திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே இயற்கை எழில் சூழ்ந்த அமைப்பில் அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். பழம் பெருமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா வருகிற 6-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி 15-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கிறது.

    பேராலய ஆண்டு திருவிழா தொடக்க நிகழ்வாக கொடியேற்ற நிகழ்ச்சி 6-ந் தேதி நடக்கிறது. அப்போது பூண்டி அன்னையின் உருவத்துடன் கூடிய கொடியை பக்தர்கள் ஜெபமாலை பாடல்களுடன் ஊர்வலமாக எடுத்து வருவார்கள். ஊர்வலம் கொடி மேடையை வந்து அடைந்தவுடன் கொடி மரத்தில் அந்தமான் நிகோபார், போர்ட் பிளேர் மறை மாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்து மரியா ஆறுதலின் அன்னை என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    திருப்பலியில் பேராலய அதிபர், சாம்சன் துணைஅதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கொடியேற்றத்தினை தொடர்ந்து நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரபவனி நடக்கிறது.

    அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் அருள் தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மே மாதம் 8-ந் தேசி புதுமை இரவு வழிபாடு கும்பகோணம் மறை மாவட்ட அருட்தந்தை யூஜின் டோனி வழிநடத்துதலில் நடைபெற உள்ளது.

    பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா நாளான மே மாதம் 14-ந் தேதி பூண்டி மாதா பேராலயத்தில் பணியாற்றி மறைந்த அருட் தந்தையர்கள் லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் அடிகளாரின் நினைவு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    மாலை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் மரியா அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார். அதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து சிறப்பு வாணவேடிக்கை நடைபெறும். மே மாதம் 15-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியை கும்பகோணம் ஆயர் அந்தோணிசாமி நிறைவேற்றுவார். மாலையில் கொடி இறக்கத்துடன் பூண்டி திருத்தல பேராலயத்தின் ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் அருட்தந்தையர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×