என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை நிறைவு சிறப்பு யாகம்
    X

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை நிறைவு சிறப்பு யாகம்

    • இன்று பெரியநாயகி அம்மனுக்கு தங்கக்கவச அலங்காரம் நடக்கிறது.
    • இரவு பெரியநாயகி அம்மன் வெள்ளிரதத்தில் எழுந்தருளி திருஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி லட்சார்ச்சனை விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது.

    இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் முத்தங்கி, மீனாட்சி சந்தனகாப்பு, வெள்ளிக்கவச அலங்காரம் நடந்தது.

    ஆடி லட்சார்ச்சனை நிறைவு நாளையொட்டி நேற்று கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. முன்னதாக சன்னதி முன்பு வெள்ளிக்குடம் வைத்து, அதில் புனிதநீர் நிரப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவில் யானை கஸ்தூரிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், 108 கலச பூஜை, விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சிறப்பு யாகம் நடந்தது. இதனையடுத்து நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய பட்டுப்புடவைகள், தங்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை யாககுண்டத்தில் போடப்பட்டு அம்மனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.

    அதன்பிறகு சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரிய பூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் பிரதான கலசம், 108 கலசங்கள் கோவில் பிரகாரம் வலம் வந்து பெரியநாயகி அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அதையடுத்து 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. முடிவில் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

    ஆடி கடைசி வெள்ளியான இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு மகா அபிஷேகம், தங்கக்கவச அலங்காரம் ஆகியவை நடைபெறுகிறது. மேலும் இரவு 8.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் வெள்ளிரதத்தில் எழுந்தருளி திருஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே வெள்ளித்தேரோட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ. சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி, துணை ஆணையர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கோவில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×