search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    7 ஜென்ம பாவங்களைப் போக்கும் மாசி மகம்
    X

    7 ஜென்ம பாவங்களைப் போக்கும் மாசி மகம்

    • மாசி மகத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கிறது புராணம்.
    • மாசி மகம் பித்ரு தோஷம் நீக்கும் தடைகள் நீக்கும் புனித நாளாகும்.

    இன்று மிகமிக சிறப்பு வாய்ந்த மாசி மகம் புண்ணிய தினமாகும்.

    இன்று ஆறு, கடல், குளம் ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது. மாசி மகம் அன்று புனித நீராடினால் ஏழு ஜென்ம பாவங்கள் கூட அடியோடு நீங்கும் என்பது ஐதீகம்.

    தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் 'கடலாடும் மாதம்' என்றும், 'தீர்த்தமாடும் மாதம்' என்றும் சொல்வார்கள். மாசி மாதத்தில் வரும் பவுர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாள் தான் மாசி மகம். இந்நாளில் இந்துக்கள் விரதமிருந்து வழிபடுவர்.

    இந்த ஆண்டு மாசி மகம் விழா இன்று கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி திதி நேற்று (23-ந் தேதி) மாலை 4.55 மணிக்கு தொடங்கியது. இன்று இரவு 10 மணி வரை உள்ளது. மகம் நட்சத்திரம் நேற்று இரவு 8.40 மணிக்கு தொடங்கி இன்று இரவு 11.05 மணி வரை உள்ளது. இதனால் இன்று காலை முதல் மாலை வரை எப்போது வேண்டுமானாலும் நீராடலாம்.

    மாசி மகத்தன்று கடல், குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளில் கூட புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக நம்பிக்கை உள்ளது. அது மட்டுமின்றி மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். சிம்ம ராசியில் குரு பயணம் செய்யும் போது மாசி மகம் நாளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை கும்பகோணத்தில் மகாமகம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் வடபகுதிகளில் இதனை கும்பமேளா என்பார்கள்.

    ஜோதிட ரீதியாகப் பார்த்தால், கும்ப ராசியில் சூரியன் இருக்க, மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாளில் பவுர்ணமி வரும். இந்த பவுர்ணமி திருநாளை மாசி மகம் என்று சொல்கிறோம். அதேபோல், கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது சிம்மத்தில் சந்திரனும் குருபகவானும் இணைந்து இருந்தால் அது மகாமகம் என்று சொல்லப்படுகிறது.

    விரதம் இருக்க விரும்புபவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சிவ சிந்தனையுடன் சிவன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதம் இருந்து பக்தியுடன் கடவுளை தரிசித்துவந்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.

    வருண பகவான் பிரம்ம ஹத்தி தோஷத்தால் பீடித்தபோது கடலில் மூழ்கியே இருந்தாராம். அந்த தோஷம் விலக சிவபெருமானை மனமுருகி வணங்கினார். அவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அருள் பாலித்தார். வருண பகவான் தோஷத்தில் இருந்து நிவாரணம் அடைந்த தினம் தான் மாசி மகம் ஆகும்.

    இந்த தினத்தில் புனித நீராடும் நபர்களுக்கு பாவங்களை போக்கிவிட சிவனிடம் வருண பகவான் அருள் செய்ய கேட்டு கொண்டாராம். அதனை கேட்ட சிவ பெருமானும் கேட்ட வரத்தை கொடுத்தாராம். வருண பகவானுக்கு முழுமையாக தோஷ நிவர்த்தி கிடைத்த தினம் என்பதால் அன்றைய தினம் புனித நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.

    மாசி மகத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள் என்கிறது புராணம். அம்பிகை வலம்புரி சங்காக கிடந்து, தாட்சாயிணியாக உருவெடுத்த நாளும் மாசி மகம் நாள்தான்.

    மாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன.

    சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசி பவுர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது. உயர்படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம். அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

    மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர். இந்த நாளில் பெருமாளையும் வழிபாடு செய்ய வேண்டும். சொந்த வீடு, நிலம் வாங்க நினைப்பவர்கள் வராகப் பெருமாளை வழிபாடு செய்யலாம். அதற்கு ஒரு கலச செம்பில் சுத்தமான நீர், பச்சை கற்பூரம், துளசி, வில்வம், விபூதி, மலர் போட்டு புனித நீராடலாம். குலதெய்வதற்கு விளக்கேற்றி பூஜை செய்யலாம்.

    ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண் குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை. மாசி மகம் நாளில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். மாசி மகம் நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

    மாசி மகம் பித்ரு தோஷம் நீக்கும் தடைகள் நீக்கும் புனித நாளாகும். மாசி மகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் முன்னோர் களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் 7 ஜென்ம பாவம் தீரும். மாசி மகம் நாளில் புனித நீராட முடியாதவர்கள் மாசி மக புராணம் படிக்கலாம், அல்லது கேட்கலாம். அதுவும் புண்ணியமே.

    Next Story
    ×