search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு நள்ளிரவில் ஆராட்டு
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு நள்ளிரவில் ஆராட்டு

    • கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சி நடந்தது.
    • அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதன்பிறகு அத்தாழபூஜையும் ஏகாந்த தீபாராதனையும்நடந்தது.

    கன்னியாகுமரியில் உலகப்புகழ் பெற்ற பகவதி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் அமாவாசை தினத்தன்று ஆடி அமாவாசை விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு அமாவாசை தினமான நேற்று ஆடி அமாவாசை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதை யொட்டி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன் பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலை மான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்தநிகழ்ச்சி நடந்தது. அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் போது பக்தர்கள் வழி நெடுகிலும் தேங்காய் பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டார்கள்.

    அம்மன் வீதி உலா முடிந்த பிறகு நள்ளிரவு 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல்சங்கமத்தில்ஆராட்டுநிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சியும் நடந்தது.

    அதன் பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்தார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதன்பிறகு அத்தாழபூஜையும் ஏகாந்த தீபாராதனையும்நடந்தது. விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×