search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தந்தையைப் போற்றுவோம்...
    X

    தந்தையைப் போற்றுவோம்...

    • சொர்க்கத்திற்கு எட்டு வாசல்கள் உண்டு.
    • தந்தை என்பவர் சொர்க்கவாசல்களில் நடுவாசல் ஆவார்.

    தாயும், தந்தையும் இரு கண்களைப் போன்றவர்கள். இருவரும் நாணயத்தின் இருபக்கங்களாக உள்ளவர்கள். தராசின் இரு தட்டுகளைப் போன்று உள்ளவர்கள். இருவரின் சிறப்புகளை பற்றி திருக்குர்ஆனும், நபிமொழிகளும் வெகுவாக பாராட்டி பேசுகிறது.

    தாய்:அன்பின் இருப்பிடம், தந்தை: அறிவின் பிறப்பிடம். தாய் குழந்தையை மென்மையாக தடவிக் கொடுப்பவள். குழந்தையை முன்னேற தட்டிக் கொடுப்பவன் தந்தை. இருவரும் அவரவர் இடத்தில் சிறந்தவர் ஆவர்.

    எனினும், நபி (ஸல்) அவர்கள் தாயையும், தந்தையையும் ஒரே நேர்கோட்டில் வைத்து அளவிடவில்லை. தாய்க்கு முதல் மூன்று இடங்களை வழங்கிய நபி (ஸல்) அவர்கள், தந்தைக்கு நான்காவது இடத்தை கொடுத்து கவுரவித்துள்ளார்கள்.

    ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?" என்று கேட்டார்.

    உடனே நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்" என்றார்கள். அவர், "பிறகு யார்?" என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் "உன் தாய்தான்" என்றார்கள். "பிறகு யார்?" என்று கேட்டதற்கும் "உன் தாய்தான்" என்று கூறினார்கள். "பிறகு யார்?" என்றார். அப்போது "உன் தந்தை" என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    தாயின் சிறப்புகளை ஏராளமான நபிமொழிகளின் மூலமாகவும், திருக்குர்ஆன் வசனங்களின் வாயிலாகவும் அறிந்திருக்கின்றோம். எனினும், தந்தையின் ஒப்பற்ற தியாகத்தையும், அவரின் உயர்வான எண்ணத்தையும், அவரின் சிறப்பான தரநிலைகளையும் உணராமல் உலா வருகின்றோம். தாய், சொர்க்கம் என்றால் தந்தை சொர்க்கத்தின் நடுவாசலாக அமைந்துள்ளார்.

    சொர்க்கத்திற்கு எட்டு வாசல்கள் உண்டு. அவற்றில் `தந்தைவாசல்' எனும் சிறப்பு பெயரில் ஒன்று உண்டு. இந்த வாசல் வழியாக சொர்க்கத்தில் நுழைபவர் யாரெனில், தந்தையிடம் அன்பாகவும், அமைதியாகவும் நடந்து கொண்டோரும், தந்தையின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்போரும், தந்தைக்கு செய்ய வேண்டிய உரிமையையும், கடமையையும் நிறைவேற்றியவரும், அவரின் திருப்தியை பெற்றவரும் ஆவர்.

    "தந்தை என்பவர் சொர்க்கவாசல்களில் நடுவாசல் ஆவார். எனவே, அதை ஒன்று நீ (பணிவிடை செய்யாமல்) வீணடிப்பாய். அல்லது பணிவிடை செய்து பாதுகாப்பாய் என நபி (ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: அஹ்மது)

    சொர்க்கத்தின் வாசல்கள் 8. அவை: 1) பாபுஸ் ஸலாத்தி-தொழுகை வாசல், 2) பாபுல் ஜிஹாதி-அறப்போர் வாசல், 3) பாபுர் ரய்யானி-நோன்பு வாசல், 4) பாபுஸ் ஸதகாத்தி-தர்ம வாசல், 5) பாபுல் ஹஜ்-ஹஜ் வாசல், 6) பாபுல் வாலித்-தந்தை வாசல், 7) பாபுல் அய்மன்-வலதுபுற வாசல், 8) பாபுத் தவ்பத்தி-மன்னிப்பின் வாசல்.

    யாருக்கு எந்த செயல்பாடுகள் அதிகம் இருக்கிறதோ அவர் அந்த செயலின் மிகையால் அந்தப் பெயரில் உள்ள வாசல் வழியாக அழைக்கப்படுவார்.

    "ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால், அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும். இதன் வழியாக நுழையுங்கள்' என்று அழைக்கப்படுவார். தொழுகையாளி தொழுகையின் வாசல் வழியாகவும், அறப்போர் புரிந்தவர் அறப்போர் வாசல் வழியாகவும், நோன்பாளி 'ரய்யான்' எனும் வாசல் வழியாகவும், தர்மம் செய்தவர் தர்மவாசல் வழியாகவும் அழைக்கப்படுவார்" என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    "தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளது" என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: திர்மிதி)

    இறைவனின் திருப்தியை நேரடியாக பெற முடியாது. எனினும், தந்தையின் அன்பை பெறுவதின் மூலம் அதைப் பெறலாம். மேலும், சொர்க்கத்தின் வாசலில் சிறந்தது அதன் நடுவாசலாகும். அதன் வழியாக சொர்க்கத்தில் நுழைவதற்கு உதவிகரமாக இருப்பதும், சொர்க்கத்தில் உயர்ந்த பதவியை அடைய உறுதுணையாக இருப்பதும், சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தை தக்கவைப்பதும் எதுவெனில் தந்தைக்கு ஆற்றவேண்டிய பணிவிடையும், தந்தையிடம் நடந்து கொள்ளும் பணிவான நடைமுறையும்தான். எனவே, தந்தைக்கு பணிவிடை செய்வோம், தந்தையை போற்றுவோம்.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    Next Story
    ×