search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சொர்க்கத்திற்கு வழிகாட்டும் விருந்தினர்கள்....
    X

    சொர்க்கத்திற்கு வழிகாட்டும் விருந்தினர்கள்....

    • விருந்தாளிகள் அடிக்கடி வரும் வீடு அல்லாஹ் நேசிக்கும் வீடு.
    • அத்தகைய வீட்டில் இறைவனின் கருணையும், அருளும் நிரம்பி இருக்கும்.

    விருந்தினரை உபசரிப்பதன் அவசியம் குறித்து இஸ்லாம் அதிகமாக வலியுறுத்தியுள்ளது. விருந்தினர்களை உபசரிப்பது ஒரு வணக்கமாகும் என்றும், விருந்து அளித்து உபசரிப்பது இறைநம்பிக்கையின் ஒரு அங்கம் என்றும் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. விருந்தினர்களை உபசரிக்காதவரிடம் இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் இருக்க முடியாது என்று நபிமொழி வலியுறுத்துகிறது.

    "யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

    "யார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

    விருந்துக்கு அழைக்கும்போது அதை மறுப்பவர்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்க முடியாது என்பதில் இருந்து விருந்துக்கு பதிலளிப்பதும் கடமை என்பதை நாம் உணரலாம்.

    விருந்தோம்பல் குறித்த ஒரு சரித்திர நிகழ்வை காண்போம்:

    ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தனது கணவர் அதிக விருந்தினர்களை அழைப்பதாகவும், அவர்களுக்கு உணவு தயாரித்து உபசரிப்பதில் தான் சோர்வடைந்து விடுவதாகவும் நபிகளாரிடம் முறையிட்டார்.

    நபி (ஸல்) அவர்கள் அந்தப்பெண்ணுக்கு உடனடியாக பதில் சொல்லவில்லை. அவர் சொல்வதை பொறுமையாக கேட்டுக்கொண்டார். சிறிது நேரம் கழித்து அந்தப்பெண் அங்கிருந்து சென்றபிறகு, அந்தப்பெண்ணின் கணவரை நபிகளார் அழைத்தார். அவரிடம், "நான் இன்று உங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வருகிறேன்" என்று கூறினார்கள்.

    அந்த மனிதர் மிகவும் மகிழ்ச்சியடைந்து, உங்கள் வருகைக்காக நான் சிறப்பான ஏற்பாடு செய்கிறேன் என்றபடி தன் வீட்டிற்கு சென்றார்.அங்கு தனது மனைவியிடம் "அல்லாஹ்வின் தூதர் இன்று நம் வீட்டிற்கு விருந்தினராக வருகிறார்கள்" என்று கூறினார்.

    அவரது மனைவியும் இதைக்கேட்டு மகிழ்ந்தார். உடனே நபிகளாரை உபசரிக்கும் ஏற்பாடுகளில் கணவன்-மனைவி இருவரும் ஈடுபட்டார்கள். சுவையான உணவு வகைகளை தயாரித்தனர். நபிகளாரும் அவர்கள் வீட்டுக்கு வந்து விருந்து உபசரிப்பை அன்புடன் ஏற்றுக்கொண்டார்கள்.

    பின்னர், நபி ஸல் அவர்கள் அந்த மனிதரிடம், "நான் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது உங்கள் வீட்டின் கதவை உங்கள் மனைவியைப் பார்க்கச் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு புறப்பட்டார்கள்.

    நாயகம் அவர்கள் கூறியபடி கணவர் தன் மனைவியிடம் தெரி விக்க, அவரும் நபிகள் புறப்படும் போது தனது வீட்டின் வாசல் கதவு பகுதியை பார்த்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த தீங்கு விளைவிக்கும் உயிரினங்கள் மற்றும் தீய சக்திகள் வீட்டைவிட்டு வெளியேறியது. இதைப்பார்த்து அந்த பெண்ணும் அவரது கணவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அந்த தம்பதிகள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபிகளார் கூறும்போது, "உங்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளி உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது அவருடன் எல்லாவிதமான தீமைகளும், சோதனைகளும், இன்னல்களும், தீங்கிழைக்கும் உயிரினங்களும் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்" என்றார்கள்.

    விருந்தாளிகள் அடிக்கடி வரும் வீடு அல்லாஹ் நேசிக்கும் வீடு. அத்தகைய வீட்டில் இறைவனின் கருணையும், அருளும் நிரம்பி இருக்கும். நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் பேசும்போது: 'அல்லாஹ் ஒரு மக்களுக்கு நன்மையை நாடினால், அவர்களுக்கு அன்பளிப்பை அனுப்புகிறான்', என்றார்கள். அப்போது தோழர்கள், 'நாயகமே அது என்ன அன்பளிப்பு?' என்று கேட்டார்கள். இதற்கு நபிகளார் பதில் அளிக்கையில், "விருந்தாளி வரும் வீட்டில் உள்ள பாவங்கள் வெளியேற்றப்படுகின்றன" என்றார்கள்.

    மற்றுமொரு நிகழ்வை காண்போம்:

    ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தங்களது வீட்டில் இருந்து புறப்பட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அங்கு வந்தார்கள்.

    "இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்?" என்று அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

    அவ்விருவரும் "பசி" என்றனர்.

    "நீங்கள் எதற்காகப் புறப்பட்டுள்ளீர்களோ அதற்காகவே நானும் புறப்பட்டுள்ளேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    பின்னர் மூவரும் அன்சாரி தோழர் ஒருவரின் வீட்டிற்கு சென்றனர். நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் இரு தோழர்களையும் கண்டு, "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் சிறந்த விருந்தினர்களைப் பெற்றவர், என்னைவிட யாரும் இல்லை" என்று அவர் கூறினார்.

    பின்னர் நபிகளாருக்கும் அவரது தோழர்களுக்கும் சிறப்பான விருந்தளித்து கவுரவித்தார். அப்போது, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த பாக்கியம் பற்றியும் மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். பசியோடு வந்தீர்கள், வயிறு நிரம்பி திரும்பிச் செல்கிறீர்கள்" என்று அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).

    விருந்தினர்களை உபசரிப்பது எத்தகைய சிறப்பு மிக்கது என்பதையும், இதன் மூலம் ஒருவர் பல்வேறு சிறப்புகளை பெற முடியும் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

    அப்துல் அஹது, சென்னை.

    Next Story
    ×