search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயத்தில் இன்று தேர்ப்பவனி
    X

    புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயத்தில் இன்று தேர்ப்பவனி

    • இன்று இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
    • நாளை திருக்கொடி இறக்கம் நடக்கிறது.

    அன்பிற்காகத் தம்மையே அர்ப்பணித்து எளிய முறையில் சிறிய வழியில் இறையன்பையும் பிறர் அன்பையும் நிறைவாக வாழ்ந்து காட்டிய எம் பாதுகாவலி புனித குழந்தை இயேசுவின் தெரசா இறையருளை வாரி வழங்கத் தேர்ந்தெடுத்த இடம்தான் கண்டன்விளை.

    கண்டன்விளை காரங்காடு பங்கின் ஒரு பகுதியாக இருந்தது. காரங்காடு பங்கு மிகப்பெரியதாக இருந்தமையால் புதிதாக இன்னும் ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென விரும்பிய அருட்தந்தை. இக்னேஷியஸ் மரியா கண்டன்விளையில் இடம் தேர்வு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

    புனித குழந்தை இயேசுவின் தெரசா

    1923-ஆம் ஆண்டு ரோம் நகரில் புனித குழந்தை இயேசுவின் தெரசா அருளாளராக அறிக்கையிடப்பட்ட விழாவில் கலந்து கொண்ட அன்றைய ஆயர் பென்சிகர் கண்டன்விளையில் எழுப்பப்படும் ஆலயம் சிறுமலரின் முதல் ஆலயமாக அமையும் என ஆயர் பேரவையில் அறிவித்தது கண்டன்விளைப் பங்கை உலகறியச் செய்தது. இந்த ஆலயம் 7-4-1924 அன்று அர்ச்சிக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட புதிய ஆலயம் 7-4-1929 அன்று கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒலிக்கும் இரு ஆலய மணிகளும் புனித தெரசாவின் சொந்த சகோதரிகள் (அன்பளிப்பாக) அன்பாக அனுப்பி வைத்தவையாகும். அம்மணிகளில் நான் அனைத்து இந்திய மக்களையும் சிறுமலருக்கு வணக்கம் செலுத்த கண்டன்விளைக்கு அழைப்பேன் என்னும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புனித குழந்தை தெரசாவின் இரு சொரூபங்களும் கார்மல் மாதா சொரூபமும் ரோமிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவையாகும்.

    திருத்தந்தையால் அனுப்பி வைக்கப்பட்ட புனிதையின் பேரருளிக்கமும் இங்கு பக்தர்களின் வணக்கத் திற்காக வைக்கப்பட்டுள்ளது. 1944-ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப்பட்ட கண்டன்விளைக்கு அருட் தந்தை. ஸ்டீபன் முதல் பங்குத்தந்தையாகப் பொறுப் பேற்றார். முன்னாள் பங்குத் தந்தையர் மற்றும் பங்கு மக்களின் முயற்சியால் புனித லூர்து அன்னை கெபி, ஒரே கல்லாலான கொடி மரம், சக்கரங்களையுடைய தேர், குருசடி, அருட்சகோதரியர் இல்லம், அருட்பணிப்பேரவை அலுவலகம், அழகிய பீடம், முப்பக்கக் கோபுரங்கள், நடுநிலைப்பள்ளி, தெரஸ் அரங்கு, செபமாலை மலைச்சிற்றாலயம், கூடாரம், யூடிக்கா மருத்துவமனை, புனித தெரசா மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி ஆகிய அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன.

    நூற்றாண்டு விழா

    1994-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட பங்கு பொன் விழாவின் நினைவாக, அன்றுமுதல் வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.15 மணிக்கு செபமாலையும் தொடர்ந்து நவநாள் திருப் பலியும் நடைபெற்று வரு கின்றன. பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்று இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர். இங்கு நாள்தோறும் காலை 6.15 மணிக்கு ஞாயிறு மற்றும் திருநாட்களில் காலை 7 மணிக்கும் திருப்பலி நடைபெற்று வருகிறது.இந்த ஆலயத்தின் நூற்றாண்டு விழா 2023-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ம் ஆண்டு நிறைவு பெறஉள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    தேர்ப்பவனி

    விழாவில் இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு, காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலியை திருத்துவபுரம் பங்குதந்தை பீட்டர் தலைமை தாங்கி நிறைவேற்றுகிறார். கருமாத்தூர் குருமட அதிபர் தேவராஜ் அருளுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். 9.30 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது.

    திருவிழா சிறப்பு திருப்பலி

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் மறைமாவட்ட அருட்பணியாளர் இஞ்ஞாசி ராஜசேகரன் தலைமை தாங்கி மலையாள திருப்பலியை நிறைவேற்றுகிறார். 11.30 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், 6.30 மணிக்கு திருக்கொடி இறக்கம் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வெ.சகாய ஜஸ்டஸ், இணை பங்குதந்தை சத்தியநாதன், துணைத்தலைவர் பி.எம். ஜஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலாளர் லல்லி மலர், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×