search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஒரே நாளில் 211 கோவில்களில் முளைப்பாரி விழா
    X

    ஒரே நாளில் 211 கோவில்களில் முளைப்பாரி விழா

    • முன்னோர்கள் கடைப்பிடித்த வழிமுறைதான் முளைப்பாரி விழா என்று கூறப்படுகிறது.
    • அம்மன் கோவில்களில் ஆடிமாதம் முளைப்பாரி விழா நடைபெற்று வருகிறது.

    ஆண்டுதோறும் வறட்சி நீங்கி மழை நன்றாக பெய்யவும், விவசாயம் நன்றாக விளையவும் நெற்பயிர்களின் முளைப் புத்திறனை கண்டறிய ஆடி மாதங்களில் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி ஆடி மாதம் பிறந்துவிட்டாலே அம்மனுக்கு திருவிழாக்கோலம் களைகட்டிவிடுவதும், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதும் வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் விளையும் தானியத்தில் ஒருபங்கை விதையாக எடுத்து பாதுகாத்து வைத்து அந்த விதைகளின் முளைப்புத்திறனை கண்டறிய இந்த முளைப்பாரி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக அம்மன்கோவில்களில் முளைப்பிறை எனப்படும் கீற்றுகொட்டகை அமைத்து காப்பு கட்டி விழா தொடங்கும். அந்த நாளில் கீற்று கொட்டகையில் முளைப்பாரி போடுவார்கள்.

    இந்த முளைப்பாரியை சூரிய ஒளி படாமல் மூடி வைத்து கடும் விரதத்துடன் பெண்கள் தினமும் தண்ணீர் தெளிப்பார்கள். முளை வளரும் 9 நாட்களும் பெண்கள் இரவில் கூடி கும்மி கொட்டி அம்மனை வணங்கி முளைப்பாரி நன்கு வளரவேண்டும் என்று வேண்டி பாடுவார்கள். 9 நாட்கள் வளர்ந்த முளைப்பாரியை பெண்கள் தலையில் சுமந்து 10-ம் நாள் மேள தாளத்தோடு அம்மனை தொழுது பாடி குலவையிட்டு ஊர்வலமாக சென்று குளத்தில் கரைப்பார்கள்.

    வேளாண்மையை செழிப்பாக்க முன்னோர்கள் கடைப்பிடித்த வழிமுறைதான் முளைப்பாரி விழா என்று கூறப்படுகிறது. முளைப்பாரி எடுப்பதால் நீர்நிலைகள் நிறைந்து உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பது ஐதீகம். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு விவசாயம் நன்றாக செழித்து வளர அனைத்து அம்மன் கோவில்களில் ஆடிமாதம் முளைப்பாரி விழா நடைபெற்று வருகிறது.

    நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில் 211 கோவில்களில் முளைப்பாரி விழா நடைபெற்றது. இதற்காக கிராமங்கள் தோறும் அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. விழாவையொட்டி ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×