search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செங்கோல் கிரீடம் அணிந்து சேவல் கொடியுடன் முருகப்பெருமான் தெய்வானையுடன் அருள்பாலித்த காட்சி.
    X
    செங்கோல் கிரீடம் அணிந்து சேவல் கொடியுடன் முருகப்பெருமான் தெய்வானையுடன் அருள்பாலித்த காட்சி.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று மகாதீபம்: பக்தர்கள் மலைக்கு செல்ல தடை

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மலைமேல் தாமிர கொப்பரையில் 400 கிலோ நெய், 100 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு மகா தீபம் ஏற்றப்படும்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முருகனுக்கு நேற்று மாலை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    வழக்கமாக தீபத்திருவிழாவின் போது காலையில் பக்தர்கள் வடம் பிடிக்க சிறிய சட்ட தேரோட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக முருகன் - தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால தீபம் ஏற்றப்பட்டு, கோவில் மணி அடிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக மலைமேல் தாமிர கொப்பரையில் 400 கிலோ நெய், 100 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு மகா தீபம் ஏற்றப்படும்.

    இந்த நிகழ்ச்சிக்காக மலைமேல் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை பார்வையிட்டு பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி சுவாமியை வழிபடுவார்கள். அதன் தொடர்ச்சியாக மாலை 6.30 மணிக்கு 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தப்படும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    Next Story
    ×