search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    நாளை கார்த்திகை மகாதீபம்: திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

    திருப்பரங்குன்றம் மலையில் நாளை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிலையில் பக்தர்கள் மலைக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 150 அடி உயரத்தில் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் தீபமேடை வர்ணம் பூசப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீபம் ஏற்றுவதற்காக மூன்றை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மெருகேற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 350 லிட்டர் நெய், 150 மீட்டர் கடா துணியிலான மெகாதிரி, 5 கிலோ கற்பூரம், தயார்படுத்துள்ளது.

    மலையடிவாரத்தில் பழனி ஆண்டவர் சன்னதி சார்ந்த மலை படிக்கட்டின் நுழைவு பகுதி, புதிய படிக்கட்டு பாதையின் நுழைவு பகுதி, மலையில் நெல்லித்தோப்பு, காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் மலை உச்சியில் உள்ள தூண் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் பக்தர்கள், பொதுமக்கள் மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து அமைப்புகள் கார்த்திகை மகாதீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தக்கூடிய மலை உச்சியில் உள்ள தூணை சுற்றியும், தூண் உயரத்திற்குமாக மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் கோவிலை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா, திருக்கார்த்திகை திருவிழாவில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும். அதில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் சிறப்பு அம்சமாக முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடப்பது சிறப்பு வாய்ந்ததாகும். திருவிழாவின் 8-ம் நாளான இன்று(வியாழக்கிழமை) இரவு 7.45 மணி முதல் 8.15 மணிக்குள் கோவிலுக்குள் மேளதாளங்கள் முழங்க, சகல பூஜையுடன், முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இதில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடதக்கது.
    Next Story
    ×