search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கத்தில் காவிரித்தாய் ரதத்திற்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு
    X
    ஸ்ரீரங்கத்தில் காவிரித்தாய் ரதத்திற்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு

    ஸ்ரீரங்கத்தில் காவிரித்தாய் ரதத்திற்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு

    ரதயாத்திரையில் வந்த துறவியர் மற்றும் சன்னியாசிகள் காவிரித்தாய் சிலைக்கு அம்மா மண்டபம் படித்துறை அருகே அபிஷேக, ஆராதனையுடன் கூட்டு வழிபாடு நடத்தினர்.
    அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் தொடங்கி காவிரியாறு வங்கக்கடலில் கலக்கும் பூம்புகார் வரை நதிநீரின் புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், நதிநீர் மாசுபடாமல் பாதுகாக்க வலியுறுத்தியும் சிறப்பு ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி 11-ம் ஆண்டு ரதயாத்திரை, குடகுமலையில் அகில பாரத சன்னியாசிகள் சங்க நிறுவனர் மற்றும் துணைத்தலைவர் சுவாமி ராமானந்தா தலைமையில் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. நேற்று மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு வந்த காவிரி ரதயாத்திரைக்கு விசுவ இந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன், பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் புவனேஸ்வரி மற்றும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மேளதாளம், வாணவேடிக்கை முழங்க பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து ரதயாத்திரையில் வந்த துறவியர் மற்றும் சன்னியாசிகள் காவிரித்தாய் சிலைக்கு அம்மா மண்டபம் படித்துறை அருகே அபிஷேக, ஆராதனையுடன் கூட்டு வழிபாடு நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து காவிரித்தாய்க்கு மகா ஆரத்தி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், காவிரி யாத்திரை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதானந்த சரஸ்வதி, வித்யாம்பா சரஸ்வதி மாதாஜீ, அறங்காவலர் கண்ணன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த காவிரி ரதயாத்திரை திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக வருகிற 11-ந் தேதி பூம்புகாரில் நிறைவடைகிறது.

    Next Story
    ×